செய்திகள்

ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் லாலுவை ஆஜர்படுத்த வாரண்ட்- மனைவி மற்றும் மகனுக்கு ஜாமீன்

Published On 2018-08-31 06:34 GMT   |   Update On 2018-08-31 06:34 GMT
ஐஆர்சிடிசி ஹோட்டல் முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை ஆஜர்படுத்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்விக்கு ஜாமீன் வழங்கியது. #IRCTCScamCase #LaluPrasadYadav
புதுடெல்லி:

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி ஓட்டல்களைப் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களை அளித்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்காக பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை லாலு பிரசாத் யாதவ் பெற்றுக் கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் புகார் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.



இந்த நிலையில் ஐஆர்சிடிசி ஓட்டல் முறைகேடு வழக்கில் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் கோரி, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை பரிசீலித்த நீதிமன்றம், ராப்ரிதேவி, தேஜஸ்வி உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதேசமயம், லாலு பிரசாத் யாதவை அக்டோபர் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தும்படி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத்துக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் நேற்று சரண் அடைந்து, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #IRCTCScamCase #LaluPrasadYadav

Tags:    

Similar News