ராஜஸ்தானில் கூட்டுறவு கடன் முழுவதும் ரத்து - தேர்தலுக்காக பா.ஜனதா அரசு நடவடிக்கை
ஜெய்ப்பூர்:
200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதியுடன் முடி வடைகிறது.
எனவே இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அங்கு முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராகிவிட்டது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமத்ஷா தேர்தல் பிரசார ரதயாத்திரை தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்.
தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாகவே வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா வெளியிட்டு வருகிறார்.
நேற்று அவர் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சலுகைகள் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ராஜஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்கள் மற்றும் தெற்கு ராஜஸ்தான் மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரம் விவசாயிகள் பயன் அடையும் வகையில் அவர்களது கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து கடன் பெற்று இருக்கிறார்கள். அவை தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா அறிவித்துள்ளார். #BJP