செய்திகள்
குஜராத்தில் நாளை 1.25 கோடி மக்கள் பங்கேற்கும் யோகாசன முகாம்கள் - ஏற்பாடுகள் தீவிரம்
4 ஆயிரம் கர்ப்பிணிகள், 8 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்பட குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றேகால் கோடி மக்கள் பங்கேற்கும் யோகாசன முகாம்கள் நாளை நடைபெறுகின்றன. #YogaDay #GujaratYogaDayevents
அகமதாபாத்:
சர்வதேச யோகாசன தினத்தையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவிலான யோகாசன முகாம்களை நடத்த மாநில அரசு அதிகாரிகளும், பா.ஜ.க.வினரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். டேராடூன் நகரில் நடைபெறும் யோகாசன முகாமில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரில் 750 முதல் 1200 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் அமைதி யோகாசன முகாம் நாளை நடைபெறவுள்ளது.
முதல் மந்திரி விஜய் ருபானி, கவர்னர் ஓ.பி.கோஹ்லி, மாநில மந்திரிகள் குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி சுபாத் ரெட்டி உள்ளிட்டோர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் யோகாசன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
மேலும், மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 377 இடங்களில் நடைபெறும் யோகாசன முகாம்களில் 4,082 கர்ப்பிணி பெண்கள், 8,732 மாற்றுத்திறனாளிகள் என சுமார் ஒன்றேகால் கோடி மக்கள் பங்கேற்பார்கள் என குஜராத் மாநில கல்வித்துறை மந்திரி பூபேந்தர்சின்ஹ் சுடசாமா இன்று தெரிவித்துள்ளார். #YogaDay #GujaratYogaDayevents