செய்திகள்
ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்து ரத்த தானம் செய்த ராணுவ வீரர்கள்
ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம் ராணுவ வீரர்கள் இருவர் ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்து புற்றுநோயால் பாதித்த பெண்ணுக்கு ரத்த தானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #CRPFjawans #BloodDonate #jawansbreakRamzanfast
ஜம்மு:
ஜம்மு-ஜாஷ்மீர் மாநிலம் கிஷ்த்வர் பகுதியை சேர்ந்தவர் அணில் சிங். அவரது சகோதரி பூஜா குமாரி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு சீரான இடைவேளையில் புதிதாக ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவருக்கு திடீரென ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பூஜா குமாரிக்கு உடனடியாக ஆறு யூனிட் ரத்தம் தேவைப்பட்டது.
ஆனால் அந்த வகை ரத்தம் அப்பெண்ணின் குடும்பத்தினரில் இரண்டு பேருக்கு மட்டுமே இருந்தது. ஆஸ்பத்திரியிலும் வேறு இடத்திலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது சகோதரர் ரத்தம் தேவை குறித்து செய்தி வெளியிட்டார்.
இதையடுத்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் நான்கு பேர் அவருக்கு ரத்தம் கொடுக்க முன்வந்தனர். அதில் முடாசிர் ரசூல் பாட், மொகமது அஸ்லாம் மிர் ஆகிய இரண்டு பேரும் ரம்ஜான் நோன்பு இருந்தனர். எனவே அவர்கள் ரத்தம் கொடுக்க முடியாது என்று ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர். உடனே அவரும் நோன்பை பாதியில் முடித்துக் கொண்டு அப்பெண்ணுக்கு ரத்த தானம் வழங்கி அவரது உயிரை காப்பாற்றினர்.
அவர்கள் இருவருக்கும் பூஜா குமாரியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #CRPFjawans #BloodDonate #jawansbreakRamzanfast