காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது: பிரகாஷ் ஜவ்டேகர்
பெங்களூரு:
பெங்களூரு மல்லேஸ் வராவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதீய ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து விட்டதாக ராகுல்காந்தி கூறுகிறார். உண்மையில் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா தான் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து உள்ளது. இதனை ராகுல் மாற்றி கூறியுள்ளார். 40 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாரதீய ஜனதாவுக்கு தற்போது 104 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துள்ளனர். ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்துள்ளனர்.
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பு மதசார்பற்ற ஜனதா தளத்தை பாரதீய ஜனதாவின் பீ டீம் என்று காங்கிரஸ் கூறியது. தேர்தலுக்கு பிறகு காங்கிரசின் பீ டீமாக மதசார்பற்ற ஜனதா தளம் செயல்படுகிறது என்ற உண்மையை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
இந்த புதிய கூட்டணியால் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை செய்யப்படாமல் கோப்புகள் மூடப்படும். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று குமாரசாமி கூறியிருந்தார். இப்போது அவர் அதை செய்வாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #congress #jds #prakashjavadekar