செய்திகள்
ஆதிவாசி பெண் சப்பயா.

கேரளாவில் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் - சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழப்பு

Published On 2018-04-17 05:19 GMT   |   Update On 2018-04-17 05:19 GMT
கேரளா முழுவதும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் போதிய சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழந்தார்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மானந்தவாடி எடவக கிராம பஞ்சாயத்து பனிய காலனியை சேர்ந்தவர் வேரன். இவரது மனைவி சப்பயா (வயது 61). ஆதிவாசிகளான இவர்கள் வனப்பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சப்பயாவுக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கேரளா முழுவதும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சப்பயாவுக்கு உடனே மருத்துவம் கிடைக்கவில்லை. அங்கிருந்த ஊழியர்கள் ஊசி, மருந்து கொடுத்து நாளைக்கு வரும்படி கூறினர்.

ஆனால் சப்பயாவின் உடல் நலம் மோசமாக உள்ளது. சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டனர். ஆனால் போதிய சிகிச்சை கிடைக்காமல் சப்பயாவின் உடல் நலம் மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆதிவாசி சப்பயா பரிதாபமாக இறந்தார்.

சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் இறந்த சம்பவம் குறித்து ஆதிவாசி மக்கள் வயநாடு கலெக்டர் சுகாத்திடம் மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கலெக்டர் கூறினார்.  #tamilnews

Tags:    

Similar News