செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2018-04-13 01:55 GMT   |   Update On 2018-04-13 01:55 GMT
குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்த நிலைத் தகவல் அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி:

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில், மலையேற்றத்திற்காக சென்றிருந்த 2 குழுவினர் சிக்கினர். இந்த பயங்கர சம்பவத்தில் 23 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்கனவே ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராஜீவ் தத்தா என்ற வக்கீல் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மூல மனுவின் மீது இடைக்கால மனு ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்றும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் தமிழ்நாடு வனத்துறையினர் நிலைத்தகவல் அறிக்கையை தாக்கல் செய்யவும், இந்த காட்டுத்தீயால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜாவேத் ரஹீம், எஸ்.பி.வாங்டி, நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ராஜீவ் தத்தா, தானே ஆஜராகி வாதாடினார். தமிழக அரசு சார்பில் அரசு வக்கீல் ஆர்.ராகேஷ் சர்மா ஆஜரானார்.

இதில் விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், குரங்கணி சம்பவம் குறித்த நிலைத்தகவல் அறிக்கையை தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல்செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கின் விசாரணையை 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #tamilnews
Tags:    

Similar News