செய்திகள்
ஹம்சாபர் ரெயில் சேவையை ஒன்றாக இணைந்து தொடங்கி வைத்த மோடி, சித்தராமையா
மைசூர் - உதய்பூர் இடையே இயக்கப்படும் ஹம்சாபர் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒன்றாக இணைந்து தொடங்கி வைத்தனர்.
பெங்களூர்:
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடும் போட்டி உள்ள நிலையில், இரு கட்சித்தலைவர்களும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இன்று காலை ஹஸ்ஸான் மாவட்டம் ஷரவனபேலாகோலாவில் மஹாமஸ்தாகாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி மைசூரு வந்தடைந்தார். அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபர் விரைவு ரெயில் சேவையை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசியல் களத்தில் கடுமையாக விமர்சித்து வரும் முதல்வர் சித்தராமையா இந்த நிகச்சியில் மோடியுடன் இணைந்து கலந்து கொண்டார்.
சித்தராமையாவின் சொந்த மாவட்டமான இங்கு இன்று மாலை நடக்க உள்ள பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேச இருக்கிறார். #TamilNews