செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தரிசனம்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி:
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியின் அதிதீவிர பக்தராவார். நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.
இந்நிலையில், சங்கராந்தி பண்டிகை வருவதை முன்னிட்டு திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி தரிசனம் செய்வதற்காக வெங்கையா நாயுடு நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு திருப்பதி வந்தார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத தரிசனத்தின்போது அவர் சுவாமியை வழிபாடு செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர், முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாதாரண பக்தர்களும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, கோயிலுக்கு செல்வதை தான் குறைத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #tamilnews