search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கையா நாயுடு"

    • இளம் அரசியல்வாதிகள் அரசியலில் சேருங்கள். ஆக்கப்பூர்வமாக இருங்கள்.
    • ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள் என முன்னாள் துணை ஜனாதிபதி தெரிவித்தார்.

    மும்பை:

    எம்.ஐ.டி அரசுப் பள்ளி மற்றும் எம்.ஐ.டி உலக அமைதிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 13-வது பாரதிய சத்ர சன்சாத் தொடக்க விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இளம் அரசியல்வாதிகள், மாணவர்கள் அரசியலில் சேருங்கள். அதில் ஆக்கப்பூர்வமாகவும், கவனத்துடனும் இருங்கள். ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள்.

    இப்போதெல்லாம் யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது. நாடு முழுவதும் சென்று சில நபர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் கட்சியைக் கூறுகிறேன். அங்கிருக்கும் மற்றவர்கள், நீங்கள் குறிப்பிடும் நபர் தற்போது அந்தக் கட்சியில் இல்லை என என்னிடம் திருத்திக் கூறுகின்றனர். ஜனநாயகத்துக்கே இது வெட்கக்கேடானது.

    கட்சி தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். அதுவே வழி. இல்லை என்றால் அரசியலின் மீதான மரியாதையை மக்கள் இழக்க நேரிடும். எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி கட்சி மாறினால் மக்கள் அரசியல் ஆர்வத்தையும் இழக்க நேரிடும். அது ஜனநாயகத்துக்கு கேடாகவும் அமைந்துவிடும். எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.
    • சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் நட்பு பாராட்டும் உங்கள் திறத்துடன், தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.

    இந்தச் சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய் மொழியிலேயே பேச வேண்டும்.
    • பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தற்போது வரை நிலுவையில் உள்ளது.

    சென்னை:

    இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாராட்டு விழா நடந்தது.

    மத்திய மந்திரி எல்.முருகன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஹண்டே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்.

    பாராட்டுக்கு நன்றி தெரிவித்து வெங்கையாநாயுடு பேசியதாவது:-

    நாட்டில் அரசியல், நீதித்துறை, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அதிலும், குறிப்பாக நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் கொலிஜியம் முறை கூடாது.

    அதேவேளையில் அரசும் நீதிபதிகளை நியமனம் செய்யக்கூடாது. இதற்காக நீதித்துறை ஆணையம் என ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக விரிவான விவாதம் தேவைப்படுகிறது.

    குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். இதற்கான சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.

    குற்றப்பின்னணி உள்ளவர்களின் வழக்குகள் நீண்டகாலமாக கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவர்கள் பதவியில் இருந்து கொண்டு அனைத்து பலன்களையும் அனுபவித்த பின்புதான் அந்த வழக்குகளில் தீர்வு காணப்படுகிறது.

    எனவே, இதுபோன்ற வழக்குகளுக்காக சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் கூட தற்போது வரை நிலுவையில் இருப்பது அவமானத்துக்கு உரியது.

    ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய் மொழியிலேயே பேச வேண்டும். எல்லா மொழியும் தேசிய மொழிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    எந்த மொழியையும் திணிப்பது தவறு. மொழி திணிப்பிற்கு எதிரானவன் நான். தமிழ்மொழியும் தேசிய மொழிதான். தமிழ்நாட்டில் உள்ள வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்க வேண்டும். அதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    காலனி ஆதிக்கத்தில் இருந்த கல்வி முறையை முடிவுக்கு கொண்டு வந்து புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் தங்களது கருத்துக்களை நியாயமான முறையில் எடுத்துரைக்க வேண்டும். உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்ய வேண்டுமே தவிர, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது.

    பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தற்போது வரை நிலுவையில் உள்ளது. ஆண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்னிடம் முறையிட்டனர். இதனை மேலும் தாமதம் செய்யாமல், இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஆந்திர மாநில எம்.பி. பீடா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் திராவிடர் தேசம் கட்சி தலைவர் கிருஷ்ணாராவ், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்ட ஏராளமானோர் வெங்கையாநாயுடுவுக்கு பொன்னாடை, பூங்கொத்து, புத்தகம் போன்றவற்றை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள்.
    • காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும்.

    சென்னை:

    தெலுங்கு சினிமாவில் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மறைந்த கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் நூற்றாண்டு பிறந்த விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    விழாவில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கலை இயக்குனர் தோட்டா தரணி, டிரம்ஸ் சிவமணி, நாட்டிய கலைஞர்கள் நந்தினி ரமணி, சுதாராணி ரகுபதி, அவசரலா கன்யாகுமாரி, தாயன்பன் உள்ளிட்டோருக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதை வெங்கையா நாயுடு வழங்கினார்.

    மேலும் கண்டசாலா எழுதிய பகவத் கீதை நூல் நாட்டிய வடிவலான தொகுப்பாக யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த யூ-டியூப் தளத்தையும், பழைய பாடல் தொகுப்பில் கண்டசாலா பாடல் இணைப்புக்கான புதிய தொகுப்பையும் வெங்கையா நாயுடு வெளியிட்டு பேசியதாவது:-

    தெலுங்கு சினிமா உலகில் 2 தலைமுறை ரசிகர்களை ஈர்த்த பெருமை கண்டசாலா வெங்கடேஸ்வரராவுக்கு உண்டு. அவரது படைப்புகளை, தொகுப்புகளை இளம் தலைமுறையினர் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். தனது மயக்கும் குரலால் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருந்த கலைஞர் அவர்.

    உலகளவில் அவரது குரலுக்கு அந்த ஈர்ப்பு சக்தி இருந்தது. அவரது பாடல்களும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்களும் என்றுமே என்னால் மறக்கமுடியாதவை. கண்டசாலாவின் குரலுக்கு எப்போதுமே ஓய்வு கிடையாது. மனதை மகிழ்ச்சியாக்கும் வல்லமை அந்த குரலுக்கு இருக்கிறது. அவரது காலம் தெலுங்கு சினிமாவின் பொற்காலம். தமிழ் உள்பட பிறமொழிகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

    தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள். பாரம்பரியம் நமக்கு மிக முக்கியமானவை. அதற்காக பாரம்பரியத்தை மதமாக பார்த்துவிட கூடாது. பாரம்பரியம் நமது வாழ்க்கை முறையை சார்ந்தது. அது மதம் ஆகாது.

    'அம்மா' என்ற வார்த்தையை சொல்லும்போது எவ்வளவு ஆனந்தமான உணர்வு நம்மில் ஏற்படுகிறது. ஆனால் நாம் நாகரிகமாக நினைத்து 'மம்மி' என்று அழைக்கிறோம். தாய்மொழியில் நம் அன்னையை அழைக்கும்போது கிடைக்கும் அந்த உணர்வு, பிற மொழிகளில் நிச்சயம் கிடைக்காது. எப்போதும் தாய்மொழிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் தாய்மொழி. அடுத்தது சகோதர மொழி. பின்னர்தான் வேற்றுமொழி. தாய்மொழியின் சிறப்பு அளவிட முடியாதது. நாகரிகம் என்ற பெயரில் நமது அடையாளத்தை மறக்கக்கூடாது.

    எனவே தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிள்ளைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை கற்றுக்கொடுங்கள். தாய்மொழியிலும் இசை கலந்திருக்கிறது. தாய் பாடும் தாலாட்டு அளப்பரிய இசை. இப்போது தாலாட்டை எங்கே கேட்க முடிகிறது. அதையெல்லாம் மறந்து போய்க்கொண்டு இருக்கிறோம். குழந்தை பருவத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களிலுமே இசையின் தாக்கம் இருக்கும்.

    காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும். அப்போது நம்மிடையே உற்சாகம் ஏற்படுவதை உணர முடியும். இதையெல்லாம் செய்யாமல் யூ-டியூப்பில் மூழ்கி கிடக்கிறோம். எனவே இதையெல்லாம் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவில் பங்கேற்ற வெங்கையா நாயுடுவுக்கு தஞ்சாவூர் ஓவியங்கள் பரிசளிக்கப்பட்டன.

    விழாவில் தமிழக அரசின் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் மனைவி சாவித்ரி, சகோதரர் ரவி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    • சென்டிரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
    • பயணிகளின் உடமைகள் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை :

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான ரெயில்வே போலீசார், இன்ஸ்பெக்டர் பத்மாகர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் நேற்று மாலை ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    போலீசார் மோப்ப நாய் உதவியுடன் நுழைவு வாயில்களில் ரெயில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு அதன் பிறகே ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.

    • இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'சீதா ராமம்'.
    • இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.

    இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    சீதா ராமம்

    தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, "சீதா ராமம்" படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், " நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பில், ஒரு அழகான காட்சி உருவாகியுள்ளது. எளிமையான காதல் கதையைப்போல் இல்லாமல் , வீரமிக்க சிப்பாய் பின்னணியுடன், பலவிதமான உணர்வுகளை வெளிக்கொணரும் இந்தப் படம், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    சீதா ராமம்

    மேலும், மற்றொரு பதிவில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்தது சீதா ராமம். போர் ஓசையின்றி கண்களுக்கு இதமான இயற்கையின் அழகை வெளிப்படுத்தியதற்கு இயக்குனர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினி தத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெலுங்கில் குறிப்பிட்டுள்ளார்.

    • இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலை மோசமடைய வழி வகுத்தது.
    • மக்களின் எதிர்பார்ப்புகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை ஓய்வு பெறுகிறார். முன்னதாக குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தம்மை சந்திக்க வந்த இந்திய தகவல் சேவை அதிகாரிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கம் மக்கள் பங்கேற்புடன் இரு வழி செயல் முறையாக இருக்க வேண்டும். அரசுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 


    ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகள் பற்றிய தகவலை சரியான நேரத்தில் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் அளிக்கப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களைப் பாகுபாடின்றி சரியான நேரத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.

    வாக்குகளைப் பெறுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கின்றன. இது போன்ற இலவச திட்டங்கள் பல மாநிலங்களின் நிதி நிலையை மோசமடைய வழிவகுத்தது. ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு அரசு நிச்சயமாக ஆதரவளிக்க வேண்டும்,

    ஆனால் அதே நேரத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுடனான சந்திப்பின்போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உலகளாவிய மற்றும் குறைந்த செலவிலான, தரமிக்க கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மீது நமது முழு கவனத்தையும் செலுத்தவேண்டும்.
    • நாம் இயற்கையை பாதுகாப்பதுடன் நமது கலாசாரத்தையும் பாதுகாப்பதே ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்.

    1942 ஆகஸ்டு 8-ந்தேதியன்று மகாத்மா காந்தி தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்', 1947-ல் ஆங்கிலேய ஒடுக்குமுறையில் இருந்து தேசம் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள வழிவகுத்தது. 'வெள்ளையனே வெளியேறு இயக்க' உரையில் காந்தியடிகள் விடுத்த "செய் அல்லது செத்துமடி" என்ற அறைகூவல், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வளர்ந்து வந்த எழுச்சியின் உணர்வை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றாக எழுந்து நிற்கச்செய்தது. தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்வதற்கும், தங்களின் எதிர்காலத்தை வடிவமைத்து கொள்வதற்குமான பேராவலால் உந்தப்பட்ட இந்திய மக்களின் ஒன்றுபட்ட மன உறுதி, அதைத்தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான நிகழ்வுகள் 1947 ஆகஸ்டு 15 அன்று நாட்டின் சுதந்திரத்தை தவிர்க்க முடியாததாக மாற்றியது.

    'வெள்ளையனே வெளியேறு' என காந்தியடிகள் அறைகூவல் விடுத்த 80 ஆண்டுகளுக்கு பின், விடுதலை போராட்ட வரலாற்றில் சிறப்புமிக்க தருணத்தை குறிக்கின்ற சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை இந்தியா கொண்டாடும் காலத்தில், நமது சாதனைகளை நாம் எண்ணிப்பார்ப்போம். நாம் சாதித்த முக்கிய செயல்களில் பெருமிதம் கொள்வோம். இன்னமும் நாம் வெற்றிகொள்ளவேண்டிய பல சவால்களை சமாளிக்கும் வழிகளை கண்டறிவோம். உலக அரங்கில் இந்தியா தற்போது முன்ணணி நாடாக திகழ்வதுடன், பல நூற்றாண்டுகால அடிமைத்தனம் மற்றும் காலனி ஆதிக்கத்திலிருந்து ஆகஸ்டு 15, 1947-ல் விடுதலை பெற்றதுடன் சுதந்திர நாடாக கடந்த 75 ஆண்டுகால பயணத்தில் பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்துள்ளது.

    நமது நீண்ட நெடிய விடுதலை போராட்டத்தில் இருந்து நாம் ஊக்கம் பெறுவது அவசியம். நம்மிடம் உள்ள பெருமளவிலான மனித வளம், உலகிலேயே மிகவும் திறமை வாய்ந்ததாகும். எனவே, இந்தியா அதன் மக்கள் தொகையை பயன்படுத்தி, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மனிதவளத்தின் முழுத்திறமையையும் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

    தற்போதைய வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், பல்வேறு துறைகளிலும் நாம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக பெருமிதம் அடைவதோடு, நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மீது கவனம் செலுத்தி அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும். போராடி பெற்ற சுதந்திரத்தை நாட்டின் அடித்தளம் வரை ஒளியேற்றி, வறுமை, எழுத்தறிவின்மை, பாலின பாகுபாடு, ஊழல் மற்றும் சமத்துவமின்மை போன்ற கொடுமைகளிலிருந்து விடுபடுவதே நமது முன்னுரிமை பணியாக இருக்கவேண்டும். அனைத்து வகையான சமத்துவமின்மைகளிலிருந்து விடுபட்டு உண்மையான சமத்துவ சமுதாயத்தை படைக்கவேண்டும் எனில், நாட்டை வளர்ச்சியடையச் செய்ய நல்லாட்சியும், நேர்மையான ஆளுகையும் அவசியமாகும். பண்டைக்கால இந்திய நாகரிகம், சமத்துவம், ஒற்றுமை மற்றும் உள்ளடக்கிய தன்மைகளைக்கொண்ட கலாசார நற்பண்புகள் நிறைந்ததாகும். தேசிய உணர்வு வழிகாட்டுதலுடன், நமது முன்னோர்களின் படைப்புத்திறனை முழுமையாக பயன்படுத்தி, வலுவான மற்றும் துடிப்புமிக்க தேசத்தை படைக்கவேண்டும்.

    உலகளாவிய மற்றும் குறைந்த செலவிலான, தரமிக்க கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மீது நமது முழு கவனத்தையும் செலுத்தவேண்டும். தாய் மொழியை ஊக்குவிப்பது கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தி மேலும் உள்ளடக்கியதாகவும், சமத்துவமிக்கதாகவும் ஆக்கவேண்டும். நாம் ஊக்கம் பெறுவதற்கும், வருங்கால தலைமுறையினரை பாதுகாக்கவும், நமது பண்டைக்கால நம்பிக்கைகளை நோக்கி செல்வதை தவிர வேறு வழியில்லை. நாம் இயற்கையை பாதுகாப்பதுடன் நமது கலாசாரத்தையும் பாதுகாப்பதே ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும். நமது சுதந்திர போராட்டத்தின் முக்கியமான காலக்கட்டத்தை நாம் நினைவில் கொள்வோமேயானால், பாரத அன்னை மீதான நமது அளவற்ற அன்பும், உணர்வுகளும் தான் நம்மை பிணைக்கும். அடக்குமுறை மற்றும் உழைப்பை சுரண்டும் காலனி ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்க நமது தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரர்கள் வழங்கிய பங்களிப்பை நமக்கு நாமே கூறிக்கொள்வதன் வாயிலாக நமது கடந்த காலத்தை திரும்பிப்பார்ப்பது நமது கடமையாகும்.

    நமது பிரபலமான மற்றும் வெகுவாக அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு கண்ட சுதந்திரமான இந்தியாவை உருவாக்க இதுவே சரியான தருணமாகும். நாம் துடிப்புமிக்க, வளமான மற்றும் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு கூட்டாக தோள் கொடுக்கவேண்டியது நமது தார்மீக கடமையாகும்.

    • அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை.
    • பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை.

    கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் 13-வது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் 10ந் தேதியுடன் நிறைவு பெற்றதையொட்டி, பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது

    அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை, அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை. இந்த பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நான் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன், அவர்களுடன் தொடர்ந்து பழகுவேன்.

    பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கவும், விவாதிப்பதற்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.

    அரசியல்வாதிகளைப் பற்றிய இயல்பான உணர்வு எல்லா இடங்களிலும் குறைந்து வருகிறது, அவர்களை பற்றி மதிப்பு குறைந்து வருவதே இதற்குக் காரணம். அதை மனதில் வைத்து உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.

    பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது மாணவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பிற பகுதி மக்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் நான் கண்டிப்புடன் இருக்கி வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வரும் 10-ம் தேதியுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஓய்வு பெறுகிறார்.
    • மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று வெங்கையா நாயுடுவுக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

    நமது துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு இந்த அவையிலிருந்து விடை பெறுகிறார். அவருக்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். இந்த அவைக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த அவையின் வரலாற்று தருணங்கள் அவரது அழகான இருப்புடன் தொடர்புடையவை.

    உங்கள் அனுபவங்கள் தேசத்தை இன்னும் பல ஆண்டுகளாக வழிநடத்தும். வெங்கையா நாயுடுவைப் பற்றிய போற்றுதலுக்குரிய விஷயங்களில் ஒன்று, இந்திய மொழிகள் மீது அவருக்கு இருந்த நாட்டம். அவர் சபைக்கு தலைமை தாங்கிய விதத்தில் இது பிரதிபலித்தது.

    நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பிரதமர் அனைவரும் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் மற்றும் நாம் அனைவரும் மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் இந்த முறை அத்தகைய தனி சிறப்புவாய்ந்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
    • குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    புதுடெல்லி :

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை மாநிலங்களவையில் எழுப்பிய அவர், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது சம்மன் அனுப்புவது அழகா? என கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளும் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன.

    இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நேற்று விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு இருப்பதாக உறுப்பினர்களிடையே ஒரு தவறான கருத்து இருக்கிறது. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அதாவது பாராளுமன்ற தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு குற்ற வழக்கில் கைதாவதில் இருந்து ஒரு எம்.பி.க்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.

    அந்தவகையில் பாராளுமன்ற தொடரின்போதும் குற்ற வழக்குகளில் எம்.பி.க்களை விசாரணை அமைப்புகளால் கைது செய்யவோ, தடுப்புக்காவலில் வைக்கவோ முடியும்.

    மேலும் குற்ற வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்தும் உறுப்பினர்களுக்கு விலக்களித்து சிறப்புரிமை அளிக்கப்படவில்லை. பாராளுமன்ற அலுவல்களை காரணம் காட்டி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    அதேநேரம் பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது சிவில் வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து எம்.பி.க்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

    • ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள்.
    • சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்பட வேண்டும்.

    சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் இளைஞர் சங்க வைர விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    ராஜஸ்தான் இளைஞர் சங்கம் செயல்படுத்தும் புத்தக வங்கி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் அற்புதமான பணியைச் செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் கடனாக வழங்கப்படுகின்றன.

    அதனை பெறும் மாணவர்கள் அந்த புத்தகங்களை இந்த ஆண்டு படித்து முடித்து பின்னர், அடுத்த ஆண்டு திருப்பிக் கொடுத்து புதிய பாடப்புத்தங்களை பெற்றுக் கொள்கிறார்கள். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,

    சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது அதன் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.

    ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள். சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு மாணவரும் தங்களுடைய பாடப் புத்தகங்களை வாங்க முடியாமலோ அல்லது கல்விக் கட்டணத்தை செலுத்தவோ முடியாமலே பின்தங்கி விடக்கூடாது.

    தேச வளர்ச்சியின் வேகத்திற்கு மிக பெரிய உந்து சக்தியாக கல்வி உள்ளது. இளைஞர்களின் முழுத் திறனையும், ஆக்கப் பூர்வமான ஆற்றல்களையும் பயன்படுத்தி இந்தியா வலிமையான நாடுகளின் பட்டியலில் சேரும்.

    அதிக மக்கள்தொகை தரும் நன்மைகள், அதிக திறமையான இளைஞர்களின் இருப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல்வேறு களங்களில் இந்தியா உலகத் தலைமையாக மாறுவதற்கு மிகப்பெரிய சாத்தியம் உள்ளது.

    21 ஆம் நூற்றாண்டின் அறிவு அடிப்படையிலான தேவைகளுக்கு ஏற்ப, தரமான கல்வியை வழங்குவதும், படித்த மனிதவளத்தின் பரந்த தொகுப்பை மிக திறமையான பணியாளர்களாக மாற்றுவதும் காலத்தின் தேவையாகும். எனவே, தரமான, குறைந்த செலவில் கல்வியைப் பெறுவதில் எந்தக் குழந்தையும் பின் தங்கிவிடாமல் இருக்க, நாம் எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும்.

    தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நமது கலாச்சாரத்தின் சாராம்சம். வாழ்க்கையில் வெற்றியும், புகழும், செல்வமும் அடைந்த ஒவ்வொரு இந்தியனின் கடமை, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அதை திரும்பக் கொடுப்பதுதான் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

    நம்முடையது பரந்த தேசத்தைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களும் இதற்கு முன்வர வேண்டும். சக குடிமக்களின் நலனுக்காக தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.

    மகா கவிஞரான திருவள்ளுவர் கூறியது போல், நற்பண்புகளில் மிகவும் சிறந்த இரக்கமே, உலகையே முன்னெடுத்து சென்று இயக்குகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×