திருப்பதி அருகே கண்டெய்னர் லாரியில் செம்மரம் கடத்தல்: 4 பேர் கைது
திருப்பதி:
திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு மலை பாதையின் அருகே உள்ள சேஷாச்சல வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பல் செம்மரங்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்திரகிரி போலீசார் திருப்பதி - பீலேர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு கண்டெய்னர் லாரி அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அதை தடுத்து நிறுத்தியபோது அதில் இருந்து சுமார் 20 பேர் தப்பியோடினர். இதில் 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், மூர்த்தி, பூபாலன், தனபாலன் என்பது தெரியவந்தது.
மேலும் கண்டெய்னரில் சிறு சிறு செம்மரக்கட்டைகள், செம்மரம் வெட்ட கத்தி, ரம்பம் மற்றும் தேவையான உணவு பொருட்கள் இருந்தன.
மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.