செய்திகள்
சத்தீஸ்கர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 நக்சல்கள் கைது
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, சி.ஆர்.பி.எப். படைவீரர்களும், மாநில போலீசாரும் இணைந்து அந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 பெண்கள் உள்பட 5 நக்சல்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, ஒரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, 30 மீட்டர் நீளம் கொண்ட எலக்ட்ரிக் வயர்கள் மற்றும் பேட்டரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள், சுரேஷ் பாஸ்கர் (25), மங்லு பாஸ்கர் (21), ஜக்கு பாஸ்கர் (55), பர்சே பீமா (21) உள்பட 5 பேர் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.