செய்திகள்

மராட்டியம்: சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேரை சாகும்வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவு

Published On 2017-11-10 23:28 GMT   |   Update On 2017-11-10 23:29 GMT
மராட்டியத்தில் 15 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த மூன்று பேரை சாகும்வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவிட்டார்.

மும்பை:

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டம் லோனி மாவலா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் விஷ்ணு லோங்கர் (36), மங்கேஷ் தத்தாராய் லோங்கர் (30), தத்தாராய் ஷிண்டே (27) ஆகிய 3 பேர் அவளை பின்தொடர்ந்து வந்தனர்.

இதை கவனித்த சிறுமி தனது வீட்டை நோக்கி வேகமாக ஒட முயன்றுள்ளாள். இருப்பினும் 3 பேரும் அவளை விடாமல் துரத்தி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவளை பிடித்து மானபங்கம் செய்தனர். அவளை தரதரவென இழுத்துச் சென்று கொடூரமாக கற்பழித்தனர்.

அதோடு அந்த சிறுமியை அங்கு கிடந்த கல்லால் சரமாரியாக தாக்கி கொடூரமான முறையல் கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை சகதிக்குள் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது அகமதுநகர் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவந்த விசாரணை நிறைவு பெற்றதையடுத்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி சுவர்ணா கேவலே, ‘சிறுமி ஈவு, இரக்கமற்ற முறையில் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். குற்றவாளிகள் சந்தோஷ் விஷ்ணு லோங்கர், மங்கேஷ் தத்தாராய் லோங்கர் மற்றும் தத்தாராய் ஷிண்டே ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
Tags:    

Similar News