search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மராட்டியம்"

    மராட்டியத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. #WomenPollingBooth
    மும்பை:

    மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு 8.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 4.16 கோடி பேர்.

    பெண் வாக்காளர்கள் மத்தியில் வாக்குரிமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முழுக்க முழுக்க பெண்களே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் 288 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றுவார்கள் என்று நேற்று மாநில தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த தேர்தலில் மராட்டியத்தில் பெண்கள் ஓட்டு 57 சதவீதம் மட்டுமே பதிவானது. சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட 80 சதவீதம் பெண்கள் ஓட்டு பதிவான நிலையில் மராட்டியம் அந்த பட்டியலில் மிகவும் பின்தங்கி இருந்தது.

    இதையடுத்து மராட்டியத்தில் பெண் வாக்காளர்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மராட்டியத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதன்படி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்படுகிறது.

    இந்த வாக்குப்பதிவு மையத்தில் தலைமை அதிகாரி, வாக்குப்பதிவு பணியாளர்கள் மட்டும் அல்லாமல் போலீசாரும் பெண்களாகவே இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களே பணியாற்றினாலும் ஆண் வாக்காளர்களும் அங்கு ஓட்டுபோட முடியும்.

    பெண் பணியாளர்கள் வழிநடத்தும் வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாக்குப்பதிவு மையங்கள் பெரும்பாலும் தாசில்தார் அலுவலகம் அல்லது போலீஸ் நிலையங்கள் அருகிலேயே அமைக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 
    மராட்டிய மாநிலம் புனேயில் ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.
    புனே:

    மராட்டிய மாநிலம் புனே போசரி போராடே வஸ்தி பகுதியில் பொதுத்துறை வங்கி ஒன்றுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்றுமுன்தினம் காலை அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தார்.

    அவர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றபோது, அங்கு ஏ.டி.எம். எந்திரம் மாயமாகி இருப்பதை கண்டு திடுக்கிட்டார். ஏ.டி.எம். எந்திரம் பெயர்க்கப்பட்டு இருப்பதற்கான சுவடு இருந்தது. இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசாரும், வங்கி அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பணத்துடன் ஏ.டி.எம். எந்திரம் கொள்ளைபோனது தெரியவந்தது.

    நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கண்காணிப்பு கேமரா வயர்களை துண்டித்துவிட்டு, கியாஸ் கட்டர் மூலம் வெட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து அலாக்காக தூக்கி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றது தெரிந்தது.

    கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 லட்சம் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துணிகர கொள்ளையில் 4 முதல் 5 பேர் வரை ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கூறினர்.

    இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா வயர்களை கொள்ளையர்கள் துண்டித்து சென்று விட்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
    மராட்டியத்திலும் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. #Samajwadi #BahujanSamajParty
    மும்பை :

    உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. மராட்டியத்தில் சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மராட்டியத்திலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்து உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி கூறியதாவது:-

    கூட்டணி குறித்து பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறோம். அகிலேஷ் யாதவிடம் பேசிவிட்டு இறுதி முடிவு எடுப்போம். பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிவதை தடுக்க வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடுவோம். காங்கிரசுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை.

    இ்வ்வாறு அவர் கூறினார்.



    இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் சுரேஜ் சக்காரே கூறுகையில், ‘‘வருகிற 20-ந்தேதிக்குள் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். விதர்பா, மரத்வாடா மண்டலத்தில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 16 லட்சம் வாக்குகளையும், 2014-ல் நடந்த தேர்தலில் 14 லட்சம் வாக்குகளையும் பெற்று உள்ளோம். எங்கள் கூட்டணியில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 முதல் 6 தொகுதிகள் ஒதுக்கப்படும்’’ என்றார்.

    பிரகாஷ் அம்பேத்கர் தனித்து போட்டியிடுவது, எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மகன் சுஜய் விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்தது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் தலித் மற்றும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கொண்ட சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு விதர்பா மண்டலத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த மண்டலத்தில் உள்ள 8 தொகுதிகளில் அந்த கட்சி 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாக்குகளை பெற்று இருந்தது. இதேபோல முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பிவண்டி, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, நாந்தெட், அவுரங்காபாத் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Samajwadi #BahujanSamajParty
    மராட்டியத்தில் சிறுமியின் தலையில் புகுந்த ஆணியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அப்புறப்படுத்தினர்
    வசாய்:

    மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாகின்தாஸ் பாடா பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக சிறுமி சாந்தினி (வயது 12) நடந்து சென்றாள். அப்போது கட்டிடத்தில் இருந்து கான்கிரீட் துண்டு ஒன்று தவறி சிறுமியின் தலையில் விழுந்தது. அதில் இருந்த ஆணி சாந்தினியின் தலையின் முன் பகுதியில் புகுந்தது. உடனடியாக அவள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

    டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஆணி சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்து 9 மி.மீட்டர் அளவுக்கு புகுந்தது தெரியவந்தது. டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அந்த ஆணியை வெற்றிகரமாக அப்புறப்படுத்தினர். தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும், ஒரு மாதத்துக்கு பிறகு அவளுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
    மராட்டியத்தில் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது. #Maharashtra #SwineFlu
    புனே:

    மராட்டியத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் 20 நாட்களில் புனேயை சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். இந்த நிலையில், அகமதுநகர் மாவட்டம் ராகுரி பகுதியை சேர்ந்த 48 வயது நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புனேயில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது. புனேயில் மேலும் 10 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மராட்டியத்தில் தண்டவாள பராமரிப்பு பணியின்போது ரெயில் மோதி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். #Maharashtra #TrainAccident #TejasExpress
    மும்பை:

    மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள ஜிட்டே ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அந்த நேரத்தில் கோவாவில் இருந்து மும்பை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, பணியில் இருந்த 3 தொழிலாளர்கள் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தனர்.

    இதில், ரெயில் கண் இமைக்கும் நேரத்தில் தொழிலாளர்கள் மீது மின்னல் வேகத்தில் மோதிச்சென்றது. இதில், தூக்கி வீசப்பட்டு தொழிலாளர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 
    மராட்டியத்தில் மாணவியை தவறான பாதைக்கு அழைத்த ஆசிரியர்கள் பிரவீன் சூர்யவன்சி, சக்கின் சோனாவானே ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். #Maharashtra #TeachersArrest #HSCExam
    மும்பை:

    மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் அட்காவ் பகுதியில் ஒரு தனியார் ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர்கள் 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி அடைய செய்வதற்காக தங்களிடம் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறி தவறான பாதைக்கு அழைத்தனர்.



    இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட மாணவி கல்லூரி வகுப்பறையில் இருந்தார். அப்போது தொடர் சீண்டல்களில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் ஒருவர், மாணவியின் கையைப்பிடித்து, உடலில் தொட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனையடுத்து மாணவி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார், கல்லூரி ஆசிரியர்கள் பிரவீன் சூர்யவன்சி, சக்கின் சோனாவானே ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
    விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2013 முதல் 2015-ம் ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலையில் மராட்டிய மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளது. #Maharashtra #FormerSuicides
    நாக்பூர்:

    கடும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் இந்த சோக நிகழ்வுகள் தொடர்வதை தடுக்க முடியவில்லை.

    விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2013 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் மராட்டிய மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளது.

    அதன்படி இந்த 3 ஆண்டுகளில் மராட்டியத்தில் மட்டும் 11,441 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா (3,740 பேர்) 2-வது இடத்தையும், மத்திய பிரதேசம் (3,578 பேர்) 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் (1,606 பேர்) 8-வது இடத்தில் உள்ளது.

    நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் விவசாயிகளின் தற்கொலையை மத்திய அரசு பதிவு செய்து கொண்டாலும், 2015-ம் ஆண்டுக்கு பிந்தைய அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #Maharashtra #FormerSuicides
    பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தி மராட்டியத்தில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடந்தது. பால் வாகனங்களை தடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    மும்பை:

    மராட்டியத்தில் பால் கொள்முதல் விலையை ரூ.5 அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் விவசாய அமைப்புகள் போராட்டத்தை தொடங்கின. போராட்டத்தையொட்டி விவசாயிகள் மாநிலம் முழுவதும் மும்பை, புனேக்கு வரும் பால் வாகனங்களை தடுத்தி நிறுத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டம் சாங்கிலி, கோலாப்பூர், மரத்வாடா மற்றும் கொங்கன் மண்டலங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

    போராட்டத்தின் 2-வது நாளான நேற்றும் விவசாயிகள் மற்றும் சுவாபிமனி சேத்காரி சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்பினர் பால் வாகனங்களை வழிமறித்து, அதில் இருந்த பாலை சாலையில் கொட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட பால் பாக்கெட்டுகளை ரோட்டில் வீசி அழித்தனர். இதேபோல பல இடங்களில் விவசாயிகள் ஏழை மக்களுக்கு பாலை இலவசமாக வழங்கினர். மேலும் விவசாயிகள் பாலில் குளித்தும், மாடுகளை பாலில் குளிக்க வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்தாராவில் பால் லாரிகளை வழிமறித்து நிறுத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். புனே, உஸ்மனாபாத், புல்தானா, அகமதுநகர், நாசிக், கோலாப்பூர், சாங்கிலி, அவுரங்காபாத், சோலாப்பூர் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சுவாபிமனி சேத்காரி சங்க தலைவர் ராஜூ ஷெட்டி எம்.பி. தனது ஆதரவாளர்களுடன் மராட்டியம்- குஜராத் எல்லையில் பால்கர் மாவட்டம் தலசாரியில் உள்ள சுங்கச்சாவடி வழியாக பால் லாரிகள் மும்பைக்கு செல்கிறதா என பார்வையிட்டார்.

    பின்னர் இதுகுறித்து ராஜூ ஷெட்டி எம்.பி. கூறுகையில், ‘சாங்கிலி, கோலாப்பூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’ என்றார்.

    இந்தநிலையில் பால் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் நேற்று கோலாப்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் இருந்து 18 டேங்கர் லாரிகளில் கோகுல் நிறுவன பால் மும்பைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 10 பால் டேங்கர் லாரிகள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என தெரிகிறது.

    இதற்கிடையே பால் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று முன்தினம் சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து பால் விவசாயிகள் கோரிக்கை குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அனைத்து கட்சி தலைவர்களுடன் நாக்பூரில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, எம்.எல்.சி. சுனில் தத்காரே, ஹமன்த் தாக்லே, நீலம் கோரே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 
    அடைமழை கொட்டுவதால் 5-வது நாளாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. மராட்டிய மாநிலத்தில் மழைக்கு 7 பேர் இறந்தனர்.
    மும்பை:

    மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து 5 நாட்களாக மழை கொட்டுகிறது. கனமழையால் மும்பை பெருநகரம் மற்றும் தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி உள்பட பல பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பால்கர் மாவட்டம் வசாய் மாணிக்பூரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் குழந்தைகள் உள்பட 66 பேர் சிக்கி இருந்தனர். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.



    சாலைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நேற்றும் சாலை, ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வெள்ளத்தால் போக்குவரத்து முடங்கியது.

    மின்சார ரெயில் சேவை மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே பல நீண்டதூர ரெயில் சேவைகளை ரத்து செய்தன. சில ரெயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பிவிடப்பட்டன.

    மோசமான வானிலை காரணமாக 407 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று மும்பையை புயல் தாக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை மறுத்த மும்பை மாநகராட்சி, இதுபோன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது.

    இதனிடையே இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை போல மீண்டும் ஒரு பாதிப்பை மும்பை பெருநகரம் சந்திக்குமோ என்ற அச்சம் மும்பைவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    கனமழை காரணமாக நல்லசோப்ரா-வசாய் ரெயில் நிலையங்கள் இடையே தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியில் சதாப்தி, வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிக்கி கொண்டன. இதனால் இரு ரெயில்களிலும் இருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நடுவழியில் தவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று படகுகள் மூலம் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதேபோல் பால்கர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 400-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீட்கப்பட்டனர்.

    மராட்டிய மாநிலத்தில் மழைக்கு யவத்மால் மாவட்டத்தில் 4 பேரும், தானே, பால்கர் மாவட்டத்தில் தலா ஒருவரும், மும்பை பெருநகரில் ஒருவரும் இறந்தனர். மாநிலம் முழுவதும் மழைக்கு 7 பேர் பலியாகி இருக்கின்றனர். 
    கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். #Maharashtra #FakeNote
    சத்தாரா:

    மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டம் கேத்தேஷ்வரா கோவில் அருகே நேற்று முன்தினம் 2 பேர் ரூ.2000 மற்றும் ரூ.500 கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சித்தனர். இதனைக் கண்டறிந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் வைத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தங்களது கூட்டாளிகள் உதவியுடன் சத்தாராவின் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வந்ததாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் கூறிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.29 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை கத்தை கத்தையாக போலீசார் கைப்பற்றினர். இது தவிர ரூ.29 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளையும் கைப்பற்றினர். இவை அனைத்தும் ரூ.2000 மற்றும் ரூ. 500 கள்ள நோட்டுகள் ஆகும்.

    சோதனையின் போது கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலுக்கு பயங்கரவாத அமைப்புகள் ஏதேனுடன் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    சமீபத்தில் தமிழ்நாட்டில் கோவையில் அச்சடிக்கப்பட்ட ரூ.1 கோடிக்கும் அதிகமான ரூ.2000 கள்ள நோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கின.

    மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறையில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. இவை நவீன தொழில் நுட்பத்தில் இருப்பதால், இதைபோன்று கள்ள நோட்டுகளை அச்சடிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தொடர்ச்சியாக கள்ள ரூபாய் நோட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருவது பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.  #Maharashtra #FakeNote
    எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் சர்ச்சையில் சிக்கிய மராட்டியத்தை சேர்ந்த கலெக்டருக்கு தேர்தல் பணியாற்ற 5 ஆண்டு தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #ElectionCommission #AbhimanyuKale
    மும்பை:

    மராட்டியத்தில் பண்டாரா-கோண்டியா தொகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. நானா பட்டோலே அக்கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பா.ஜனதாவில் இருந்தும் விலகினார்.

    இதனால் காலியான பண்டாரா-கோண்டியா தொகுதிக்கு கடந்த மாதம் 28-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மதுக்கர் குகடே(காங்கிரஸ் ஆதரவு), பா.ஜனதா வேட்பாளர் ஹேமந்த் பட்லேயை வீழ்த்தி வெற்றி பெற்றார்.



    இதற்கிடையே தேர்தலின்போது பண்டாரா-கோண்டியா தொகுதியில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறாகின. இதனால் 49 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

    இதுதவிர பூச்சி தாக்குதலால் விளைபயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க விடுமுறை நாட்களிலும் வங்கிகளை திறந்து வைக்குமாறு கோண்டியா மாவட்ட கலெக்டர் அபிமன்யு காலே தேர்தல் சமயத்தில் உத்தரவிட்டார்.

    கலெக்டரின் இந்த உத்தரவு பண்டாரா-கோண்டியா இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும் மாவட்ட கலெக்டர் ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இதைத்தொடர்ந்து கோண்டியா மாவட்ட கலெக்டர் அபிமன்யு காலே பணி இடமாறுதல் செய்யப்பட்டார். இந்தநிலையில் அபிமன்யு காலே 5 ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தல் பணியிலும் ஈடுபடுவதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

    இது குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறுகையில், ‘பண்டாரா-கோண்டியா இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பொதுவாக தேர்தலுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் அங்கு பின்பற்றப்படவில்லை. அபிமன்யு காலே மீதான நடவடிக்கைக்கு விவசாயிகள் நிவாரணம் தொடர்பான சர்ச்சையும் ஒரு காரணமே தவிர அது மட்டுமே காரணம் கிடையாது’ என தெரிவித்தார்.  #ElectionCommission #AbhimanyuKale  #Tamilnews 
    ×