செய்திகள்

நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது என்னை ஜெயிலில் தள்ள காங். சதி செய்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Published On 2017-10-16 20:25 GMT   |   Update On 2017-10-16 20:25 GMT
நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது என்னை ஜெயிலில் தள்ள காங்கிரஸ் சதி செய்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
காந்திநகர்:

நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது என்னை ஜெயிலில் தள்ள காங்கிரஸ் சதி செய்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே பட் கிராமத்தில் நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

நேரு குடும்பத்துக்கு குஜராத்தையும், குஜராத்திகளையும் பிடிக்காது. குஜராத்தை சேர்ந்த சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரை நேரு குடும்பம் அவமானப்படுத்தியது. சர்தார் சரோவர் அணை திட்டம், சர்தார் வல்லபாய் பட்டேல் கனவு கண்ட திட்டம் என்பதால், 50 ஆண்டுகள் ஆகியும் அத்திட்டம் முடிவடைய அனுமதிக்கவில்லை.



குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், காங்கிரஸ் கட்சி, மதவாதம், சாதிவாதம் என்று பேசி வருகிறது. வளர்ச்சி கோஷத்தை முன்வைத்து இந்த தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாரா?

காங்கிரஸ் கட்சியை எதிர்மறை சிந்தனைதான் ஆட்டிப் படைக்கிறது. நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது, என்னை ஜெயிலில் தள்ள காங்கிரஸ் சதித்திட்டம் தீட்டியது. அமித் ஷா வெளியே இருந்தால், அது சாத்தியம் இல்லை என்று கருதி, அவரை ஜெயிலில் அடைத்தது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவும், ராகுல் காந்தியும் ஜாமீனில் வெளியே உள்ளனர். ஒட்டுமொத்த கட்சியும் ஜாமீனில்தான் உள்ளது. எங்களை தலித் விரோத கட்சி, நகர்ப்புற கட்சி என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், அதிகமான தலித் எம்.பி.க்களும், கிராமப்புற எம்.பி.க்களும் பா.ஜனதாவில்தான் உள்ளனர்.

இவ்வாறு மோடி பேசினார். 
Tags:    

Similar News