செய்திகள்
16 மில்லியன் வண்ணக் கலவைகளில் மின்னிய ஜனாதிபதி மாளிகை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் வடக்கு மற்றும் தெற்கு கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
புதுடெல்லியில் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இந்திய அரசின் மிக முதன்மையான அரசுக் கட்டிடங்களைக் கொண்டுள்ள நிலப்பரப்பு இரைசினாக் குன்று ஆகும். இங்கு குடியரசுத் தலைவரின் அலுவல்முறை வாழிடம், பிரதமரின் அலுவலகம், நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் முக்கிய அமைச்சகங்கள் இடம்பெற்றுள்ள தலைமைச் செயலக கட்டிடங்கள் அமைந்துள்ளன. இதனைச் சூழ்ந்து முதன்மையானக் கட்டிடங்களும் சாலைகளும் உள்ளன.
இங்குள்ள பாரம்பரிய வடக்கு மற்றும் தெற்கு கட்டிடங்களை லேசர் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று, இந்த கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த லேசர் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. இதையடுத்து சுமார் 16 மில்லியன் வண்ணங்களில் இந்த கட்டிடங்கள் மின்னியது.
இந்த விளக்குகளை சுமார் 42 ஆண்டுகள் அரசுக்காக பணியாற்றிய உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மணிபால் சிங் என்பவர் ‘ஸ்விட் ஆன்’ செய்தார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.