செய்திகள்

எனது குரலை ஒடுக்கவே மத்திய அரசு நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Published On 2017-09-26 07:38 GMT   |   Update On 2017-09-26 07:38 GMT
அமலாக்க துறையின் மூலம் தன்னை மிரட்டும் நோக்கத்துடனும், தனது குரலை ஒடுக்க நினைத்தும் மத்திய அரசு கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

அது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. அதில் அவரது நிரந்தர வைப்பு தொகையில் உள்ள ரூ.90 லட்சமும் அடங்கும்.

இதுகுறித்து ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமலாக்க துறையின் மூலம் என்னை மிரட்டும் நோக்கத்துடனும், எனது குரலை ஒடுக்க நினைத்தும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். முடக்கத்துக்கான உத்தரவு வழங்கப்பட்டதும் கோர்ட்டில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த விவகாரத்தில் எனது மகன் கார்த்தி சிதம்பரம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரிய செயலாளர்களின் ஒப்புதலுக்கு பிறகே அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News