செய்திகள்
மேற்குவங்கம்: மொகரம் தினத்தன்று துர்கா பூஜை சிலைகளை கரைக்க நீதிமன்றம் அனுமதி
மேற்குவங்க மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி துர்கா சிலைகளை கரைக்க தடையில்லை என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா:
இந்த ஆண்டு முஸ்லீம்களின் பண்டிகையான மொகரமும், இந்துக்களின் பண்டிகையுமான துர்கா பூஜையும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே நாளில் வர இருக்கிறது.
இதன் காரணமாக மதம் சார்ந்த மோதல்கள் ஏற்படலாம் என்ற காரணத்தால் துர்கா சிலைகளை கரைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இந்த முடிவின் மூலம் மாநில அரசு, இந்து மதத்தினரின் சம்பிரதாயத்திற்கு தடை போடுவதாகவும், முஸ்லீம் மதத்தினரின் வாக்குவங்கியை ஈர்ப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாகவும் பெரும் சர்ச்சை எழுந்தது.
துர்கா சிலை கரைப்பு விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்குவங்க அரசின் தடையுத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், மொகரம் மற்றும் துர்கா பூஜை ஊர்வலங்கள் தனித்தனியான பாதைகளில் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், அனைத்து தினங்களிலும் நள்ளிரவு 12 மணி வரை துர்கா சிலைகளை கரைக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.