search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை கரைப்பு"

    • விநாயகர் சிலை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்து தங்கள் குடும்பத்துடன் வழிபட்டனர்‌.
    • கிறிஸ்துவ பாதிரியார்கள் திரளாக கூடி விநாயகர் சிலை ஊர்வலத்தை வரவேற்றனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு விநாயகர் சிலை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்து தங்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். இந்த நிலையில் விநாயகர் சிலைகளை தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு ஆகிய நீர் நிலைகளில் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம்அனுமதி அளித்திருந்தனர். இந்த நிலையில் காலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நிலையில் மாலையில் ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சிலையை பயபக்தியுடன் கரைத்தனர். இதனை தொடர்ந்து இன்று 3 -ம்நாள் மற்றும் வெள்ளிக்கிழமை 5-ம் நாளில் விநாயகர் சிலை மாவட்டம் முழுவதிலிருந்து கரைப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு ஆரவாரத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். இதைெயாட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பெரிய அளவில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு கொண்டு வந்தபோது போலீஸ் நிலையம் முன்பு விநாயகர் சிலையை இறக்கி அங்கிருந்து விநாயகர் சிலையை சிறிது தூரம் கொண்டு சென்று கற்பூரம், ஊதுவத்தி ஏற்றி அங்கு தயார் நிலையில் இருந்த களப்பணியாளர்கள் விநாயகர் சிலையை பாதுகாப்பாக கடலில் கரைத்தனர். மேலும் சிறிய அளவிலான விநாயகர் சிலையை பொதுமக்கள் கொண்டு சென்று வேறு இடத்தில் கரைப்பதற்கு தனியாக அனுப்பி வைத்தனர். அவர்களும் பயபக்தியுடன் விநாயகர் சிலையை கடலில் விட்டு கரைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

    பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. 3-வது நாளான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலூர் கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக பண்ருட்டி நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேடையில் இருந்து இந்து முன்னணி முக்கிய பிரமுகர்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதே போல பண்ருட்டி படவேட்டம்மன் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். பண்ருட்டி 4 முனை சந்திப்பு பண்ருட்டி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பண்ருட்டியின் நகர முஸ்லிம் ஜமாத்தார்கள், பண்ருட்டி நகர கிறிஸ்துவ பாதிரியார்கள் திரளாக கூடி விநாயகர் சிலை ஊர்வலத்தை வரவேற்றனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜ தாமரை பாண்டியன், நந்தகுமார், பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஏற்காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்காட்டில் உள்ள சுற்றுவட்டார பகுதியில் 21 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.
    • பள்ளி குழந்தைகள் பள்ளி முடிந்தவுடன் தங்கள் வீடுகளில் வைத்திருந்த சிறிய சிறிய விநாயகர் சிலைகளை எடுத்து வந்து ஏற்காடு ஏரியில் கரைத்து மகிழ்ந்தனர்.

    ஏற்காடு:

    ஏற்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அங்குள்ள படகு இல்ல ஏரியில் கரைக்கப்பட்டன.

    21 விநாயகர் சிலைகள்

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்காட்டில் உள்ள சுற்றுவட்டார பகுதியில் 21 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். அந்த சிலைகளை 3 நாட்களில் கரைத்துவிட வேண்டும் என்று ஏற்காடு காவல் துறையினர் கூறியிருந்ததை தொடர்ந்து அந்த சிலைகளை தங்கள் பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து இன்று காலை முதல் மாலை 7 மணி வரை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையின் உதவியுடன் ஏற்காடு படகு இல்ல ஏரியில் பக்தர்கள் கரைத்தனர்.

    பள்ளி குழந்தைகள் பள்ளி முடிந்தவுடன் தங்கள் வீடுகளில் வைத்திருந்த சிறிய சிறிய விநாயகர் சிலைகளை எடுத்து வந்து ஏற்காடு ஏரியில் கரைத்து மகிழ்ந்தனர். படகு இல்ல ஏரியில் சிலைகளை கரைத்ததால் அந்த சிலைகள் கரைப்பதை சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தவாறு பார்த்து ரசித்தனர். சிலைகளுடன் ஊர்வலமாக வந்த ஏற்காடு உள்ளூர் பொதுமக்கள் ஏரியின் கரையில் நின்று சிலை கரைப்பதை வேடிக்கை பார்த்தனர்.

    • களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.
    • பெயிண்ட் பூசப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்ற பின் அந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும். சிலைகளின் உயரம் மற்றும் அவை வைக்கப்பட வேண்டிய மேடை போன்றவற்றின் அளவு அந்த இடத்தின் அமைப்பாளரால் குறிப்பிடப்பட வேண்டும்.

    சிலை வைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விழா ஏற்பாட்டாளர்கள் குழாய் வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை செய்யப்படும் நேரங்களில் முறையே 2 மணிநேரம் மட்டுமே ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.ஒவ்வொரு சிலையையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் நியமனம் செய்வார்கள்.

    ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் செய்ய வேண்டும். அனைத்து ஊர்வலங்களும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மத ரீதியான பகுதிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்து செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வேதிப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் பயன்படுத்தக் கூடாது.

    மேலும், பெயிண்ட் பூசப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது. சிலைகள் நிறுவப்படும் பந்தல் கட்டுமானத்தை எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருட்களை கொண்டு செய்வதை தவிர்க்க வேண்டும். வழிபாடு இடத்தின் அருகில் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×