செய்திகள்

பிரதமர் மோடிக்கு நாளை பிறந்தநாள்: கோலாகலமாக கொண்டாட உ.பி. அரசு முடிவு

Published On 2017-09-16 09:02 GMT   |   Update On 2017-09-16 09:02 GMT
பிரதமர் மோடியின் பிறந்த தின விழாவை வரலாற்று சிறப்புக்குரிய விழாவாக உத்தரப்பிரதேசம் மாநில அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது.
லக்னோ:

பிரதமர் மோடியின் 67-வது பிறந்தநாளை பா.ஜ.க.வினர் நாளை நாடு முழுவதும் கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசம் மாநில அரசும் மோடியின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதி பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். எனவே இங்கு நடைபெறும் மோடியின் பிறந்தநாள் விழாவில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்கிறார். அக்டோபர் 2-ம் தேதி அங்கு மாரத்தான் போட்டி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.



இதேபோல், லக்னோவில் சுமார் 110 அடி அளவுக்கு பிரதமர் மோடியின் சிலையை உள்ளூர் பா.ஜ.க.வினர் அமைத்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மோடியின் பிறந்தநாளை செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தூய்மையை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.யில் உள்ள சுமார் 1,000 தொடக்க பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதில் பா.ஜ.க.வின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News