செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

Published On 2017-09-08 10:38 GMT   |   Update On 2017-09-08 10:38 GMT
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரியும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மணி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


“உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும் என்பதால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான எந்த ஒரு போரட்டத்தையும்  அனுமதிக்க முடியாது. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அரசியல் கட்சிகள் கடை அடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தக்கூடாது.

சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்சனைகளை கையாள வேண்டும். அனிதா மரணம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News