செய்திகள்
உத்தரபிரதேசம்: தூங்கிக்கொண்டிருந்த இரு பெண்களை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி
உத்தரபிரதேசம் மாநிலத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சகோதரிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய மர்ம நபர் முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பரேய்லி பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரிகளிடம் அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று(வெள்ளி) காலை தேவரான்ய ஜகிரில் உள்ள தங்கள் வீட்டில் இரு சகோதரிகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் நான்கு மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ மளமளவென பரவியது.
வலி தாங்க முடியாமல் அலறிய சகோதரிகளின் சத்தம் கேட்டு வந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் 19 வயதான மூத்த சகோதரிக்கு 95 சதவிகித தீக்காயம் ஏற்பட்டது. மற்றொரு சகோதரிக்கு(17) 60 சதவிகித தீக்காயம் ஏற்பட்டது.
எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைய சகோதரி இச்சம்பவம் குறித்து கூறினார்.
அவர் கூறியதாவது:-
‘உள்ளுரை சேர்ந்த சில இளைஞர்கள் எங்களை சில மாதங்களாக பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தனர். நேற்றிரவு நானும், என் சகோதரியும் ஒரே படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது சுமார் 2 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் எங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்தார்’, என கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.