செய்திகள்

குழந்தைகளின் படங்களுடன் கூடிய ஆபாச வலைத்தளங்களை கட்டுப்படுத்த அமெரிக்க அமைப்பு உதவி: மத்திய அரசு தகவல்

Published On 2017-07-17 00:30 GMT   |   Update On 2017-07-17 00:30 GMT
குழந்தைகளின் ஆபாச வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவை சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக மத்திய அரசு தாக்கல் செய்த அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் குழந்தைகளின் ஆபாச வலைத்தளங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.



எனவே இது குறித்த அறிக்கை ஒன்றை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் கோர்ட்டில் கூறுகையில், கடந்த மாதம் மட்டும் குழந்தைகளின் ஆபாச படங்கள் அடங்கிய 3,522 வலைத்தளங்கள் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் இது போன்ற வலைத்தளங்களை முடக்க பள்ளிகளில் ‘ஜாமர்’ கருவிகள் பொருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இதைப்போல குழந்தைகளின் ஆபாச வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவை சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக மத்திய அரசு தாக்கல் செய்த அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ‘மாயமான மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம்’ எனப்படும் அந்த அமைப்பு அமெரிக்கா மற்றும் 99 நாடுகளுக்கு இலவசமாக இத்தகைய உதவிகளை செய்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. 
Tags:    

Similar News