செய்திகள்

ராம்நாத் கோவிந்துக்கு திரிபுரா திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் ஆதரவு

Published On 2017-07-02 23:18 GMT   |   Update On 2017-07-02 23:18 GMT
ஜனாதிபதி தேர்தலில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
அகர்தலா:

ஜனாதிபதி தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளரான மீராகுமாருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. அதே சமயம் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

அந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் நேற்று திடீரென ஒரு கூட்டத்தை கூட்டி இந்த முடிவை அறிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

தற்போது திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து நின்று தேர்தலில் வெற்றி பெற்றோம். ஆனால், தற்போது ஜனாதிபதி தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீராகுமாரை நாங்கள் ஆதரிக்க முடியாது. அதனால் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

மேலும், பா.ஜனதா கட்சியில் சேரப்போகிறீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, தற்போது அந்த எண்ணம் இல்லை. அதற்கு காலம் பதில் சொல்லும் என்று கூறினர். 
Tags:    

Similar News