செய்திகள்

மீராகுமார் நாளை வேட்புமனு தாக்கல்: தி.மு.க. சார்பில் கனிமொழி பங்கேற்பு

Published On 2017-06-27 06:37 GMT   |   Update On 2017-06-27 06:37 GMT
நாளை மீராகுமார் வேட்புமனு தாக்கல் செய்யும் போது 17 கட்சி தலைவர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி:

புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மீராகுமார், நாளை (புதன்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். அவருக்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்டுகள் உள்பட 17 கட்சிகளின் ஆதரவு உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மக்கள் பிரதிநிதிகள் 50 பேர் முன் மொழியவும் 50 பேர் வழிமொழியவும் வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் மீராகுமாருக்கு முன்மொழியவும், வழி மொழியவும். 100 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அதில் தி.மு.க. சார்பில் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகிய 3 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதுபோல எம்.எல்.ஏ.க்களில் மு.க.ஸ்டாலின் உள்பட 23 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

நாளை மீராகுமார் வேட்புமனு தாக்கல் செய்யும் போது 17 கட்சி தலைவர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார்.

Tags:    

Similar News