செய்திகள்

அசாமில் மாயமான போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு: 2 வீரர்கள் கதி என்ன?

Published On 2017-05-26 08:09 GMT   |   Update On 2017-05-26 08:09 GMT
அசாமில் மாயமான போர் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 2 வீரர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.
இட்டாநகர்:

அசாம் மாநில தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 23-ந்தேதி சுகோய்-30 ரக போர் விமானத்தில் 2 விமானிகள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றனர். தேஜ்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் பறந்தபோது திடீரென்று ரேடாரின் இணைப்பை விமானம் இழந்தது.

ரேடார் இணைப்பை இழந்த பகுதி சர்ச்சைக்குரிய சீன எல்லையாகும். எனவே விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு காரணங்களுக்காக தரை இறக்கப்பட்டதா? என விசாரணை நடைபெற்று வந்தது. மாயமான விமானத்தை தேடும் பணியும் நடைபெற்றது.

இதற்கிடையே மாயமான போர் விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேச மாநிலம் காமெங் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் இன்று கண்டு பிடிக்கப்பட்டது.


ஆனால் விமானம் நொறுங்கியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. மேலும் அதில் பயணம் செய்த வீரர்கள் கதி என்ன என்றும் தெரியவில்லை.

சுகோய்-30 ரக போர் விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. 2 என்ஜின்களுடன் அதிவேகமாக பறக்கும் திறன் கொண்டது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News