செய்திகள்
ஏர்போர்ட்டில் மத்திய பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பெங்களூர் விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் கைக்வாட்(28) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்.
இன்று காலை பணியில் இருக்கும் போது சுரேஷ் கைக்வாட், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், விமானநிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் கைக்வாட் சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றிருந்தார். இதனால், கடும் மன அழுத்தத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சுரேஷின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.