செய்திகள்
எதிர்க்கட்சியினர் மீது வருமானவரி சோதனை: மோடிக்கு சாதகமான நிலை ஏற்படாது- வீரமணி பேட்டி
எதிர்க்கட்சியினர் மீது வருமானவரி சோதனை, சிபிஐயை பயன்படுத்துவதால் மோடிக்கு சாதகமான நிலை ஏற்படாது என்று கடலூரில் தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார். #veeramani #pmmodi #incometaxraid
கடலூர்:
கடலூரில் திராவிட கழக தலைவர் வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக வருகிற மே 23-ந் தேதி இந்த ஆட்சிகள் கண்டிப்பாக மாறக் கூடிய நிலையில் உள்ளது. பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்வி என்பது அறவே மறுக்கப்படும் என்று கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற துணை வேந்தர்கள் கூறி வருகின்றனர்.
சிறு, குறு வியாபாரிகள், மாணவர்கள் விவசாயிகள் என அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த தேர்தலில் தப்பித்தவறி மீண்டும் மோடி வந்தால் தேர்தலே இருக்காது என வெளிப்படையாக அனைவரும் கூறி வருகிறார்கள்.
இந்திய அளவில் மோடிக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு கூறினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஆகையால் மக்கள் மனநிலை என்பது மோடிக்கு எதிர்ப்பு அலை என்பது நன்கு தெரிகிறது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படவில்லை என அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிந்து வருகிறது. தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அங்கமாக இருந்து வருவது வருத்தத்துக்குரியது.
எதிர்க்கட்சிகளையே குறிவைத்து வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மோடி தன்னுடைய ஆயுதமாக வருமான வரித்துறை, சி.பி.ஐ.யை பயன்படுத்தி வருகிறார். இதன்மூலம் மோடிக்கு சாதகமான நிலை ஏற்படாது. அதற்கு மாறாக எதிர் நிலை தான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #veeramani #pmmodi #incometaxraid