உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் வேலூர் பயணி கைது

Published On 2022-07-06 08:40 GMT   |   Update On 2022-07-06 08:40 GMT
  • சந்திரன் ஏமன் நாட்டிற்கு சென்றிருந்ததால், குடியுரிமை அதிகாரிகள் அவரின் பயணத்தை ரத்து செய்தனர்.
  • குடியுரிமை அதிகாரிகள், சந்திரனை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும், விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது வேலூரைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவரின் பாஸ்போர்ட், ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவர் ஏற்கனவே 2017-ம் ஆண்டில், இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்த ஏமன் நாட்டுக்கு சென்று, 6 மாதங்கள் அங்கு தங்கி இருந்தது தெரிய வந்தது.

இந்திய அரசு ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் யாரும் செல்லக்கூடாது என்ற தடையை, கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. அந்த தடையை மீறி செல்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அதையும் மீறி சந்திரன் ஏமன் நாட்டிற்கு சென்றிருந்ததால், குடியுரிமை அதிகாரிகள் சந்திரனின் பயணத்தை ரத்து செய்தனர்.

அவரிடம் மேலும் கியூ பிராஞ்ச் போலீசாரும், மத்திய உளவு பிரிவினரும் தீவிர விசாரணை நடத்தினர். தற்போதும் இவர் ஓமன் நாட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்து தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு செல்வதற்காக திட்டம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், சந்திரனை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து, தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றது தொடர்பாக பாஸ்போா்ட் விதிகளின்படி வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News