உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: விபத்தில் பலியான வாலிபரின் உறவினர்கள் மறியல்

Published On 2022-09-04 09:23 GMT   |   Update On 2022-09-04 09:23 GMT
  • பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • விபத்தை ஏற்படுத்தி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

வடவள்ளி,

கோவை பூலுவப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்தவர் விதர்சன் (வயது 18).

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜீவரத்தினம் (39) என்பவரும் நேற்று வேலைக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

சிறுவாணி மெயின் ரோடு அப்புச்சிமார் கோவில் மண்டபம் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விதர்சனும், ஜீவரத்தினமும் தூக்கி வீசப்பட்டனர்.

விதர்சன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ஜீவரத்தினத்தை அந்த பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விதர்சன் மரணம் அடைந்தது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் ஏராளமானோர் சிறுவாணி மெயின் ரோட்டில் திரண்டனர். அவர்கள் விதர்சன் மரணத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக எந்தவொரு வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

அந்த பகுதி முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த பேரூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவி டாமல் இன்ஸ்பெக்டரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை ஆகியோரும் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்தை ஏற்படுத்தி டிரைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் கைவிடப்பட்ட பிறகே போக்குவரத்து சீரானது. 

Tags:    

Similar News