மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
- கட்டிட வேலை செய்ய பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வந்துள்ளார்.
- அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
பல்லடம்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த நரியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் வீரமணி (வயது 19). இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது அவருக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கட்டிட வேலை செய்ய பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வந்துள்ளார். அங்கு தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நடைபெறும் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கட்டிடத்திற்கு தண்ணீர் விடுவதற்காக மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசி உள்ளது. இதனை அறிந்து அருகில் இருந்த தெற்கு அவினாசிபாளையம், தொட்டம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் காப்பாற்றச் சென்றுள்ளார். அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வீரமணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். சரவணனுக்கு காயம் மட்டுமே ஏற்பட்டு உயிர் தப்பினார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.