உள்ளூர் செய்திகள்

வீட்டில் அடைத்து வைத்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2022-06-19 05:17 GMT   |   Update On 2022-06-19 05:17 GMT
  • கல்லூரிக்கு சென்ற சிறுமி மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.
  • வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த மாணவி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள அவரது உறவினரான தீனதயாளன் என்பவருடன் இருப்பது தெரியவந்தது.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கிராமப்பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த மாணவி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள அவரது உறவினரான தீனதயாளன்(20) என்பவருடன் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2பேரையும் பல்லடம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் தீன தயாளன், மாணவியை காதலித்து வந்ததும், கடந்த 9-ந்தேதி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை தீனதயாளன் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று திருமணம் செய்ததுடன், சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி தலைமையிலான போலீசார் சிறுமி காணாமல் போன வழக்கை போக்சோ வழக்காக மாற்றி தீனதயாளனை கைது செய்தனர். பின்னர் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News