உள்ளூர் செய்திகள்

தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை- எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-09-12 08:59 GMT   |   Update On 2022-09-12 08:59 GMT
  • இரு பதவிகளுக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு உள்ள அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
  • இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது. இதுகுறித்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடருவதற்கு அனுமதி கோரி அக்கட்சியின் உறுப்பினர்கள் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கு தான் முழு அதிகாரமும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த பதவியை நீக்கிவிட்டு அதற்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

இந்த இரு பதவிகளுக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு உள்ள அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது. இதுகுறித்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.

இந்த வழக்கிற்கு அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மனுதாரர்கள் இருவரும் அ.தி.மு.க.வில் உறுப்பினர்கள் இல்லை. எனவே இந்த வழக்கை தொடருவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை' என்று கூறி இருந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர்கள் இருவரும் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி அளித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயணன், ராம் குமார் ஆதித்தனும், சுரேன் பழனிசாமியும் அ.தி.மு.க.வில் தற்போது அடிப்படை உறுப்பினர்களாக இல்லை.

ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள உறுப்பினர் அட்டை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதமே காலாவதியாகிவிட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.

Tags:    

Similar News