ஆள் இல்லாத கடைக்கு ஓ.பி.எஸ். டீ ஆற்றுகிறார்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்து, தவறான தகவல்கள் பரப்பி விடப்படுகிறது.
- சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க. சார்பில் அதிகாரபூர்வமாக எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழக பிரச்சினைகள் குறித்து மனு அளிப்பார்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"தி.மு.க ஆட்சியில் சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசை கண்டித்து, சென்னையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதுதொடர்பாக, அ.தி.மு.க. அமைப்பு சார்பில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்து, தவறான தகவல்கள் பரப்பி விடப்படுகிறது. சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க. சார்பில் அதிகாரபூர்வமாக எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழக பிரச்சினைகள் குறித்து மனு அளிப்பார். பெண்களுக்கு உதவித் தொகை, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட தி.மு.க. அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்த அரசு விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு லேபிள் ஓட்டுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்த கேள்விக்கு, ஓ.பி.எஸ். ஆள் இல்லாத கடைக்கு டீ ஆற்றுகிறார் என்றார்.