எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- மேலும் பொதுக்குழுவுக்கு தடை கேட்ட கூடுதல் மனுக்களும் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
சென்னை:
சென்னையில் கடந்த 23-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நீதிபதிகள் அளித்த உத்தரவு மீறப்பட்டுள்ளதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்காக வந்தது. இதனை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கு தொடர்பாக பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். அதே நேரத்தில் பொதுக்குழுவுக்கு தடை கேட்ட கூடுதல் மனுக்களும் இன்று ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.