தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியினர் 'திடீர்' ஆர்ப்பாட்டம்
- புதிய தமிழகம் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அப்பாவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.
தூத்துக்குடி:
விளாத்தி்குளம் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலைகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் விளாத்திகுளம் பகுதி விவசாயிகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், உமையனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட அருங் குளம், ஜக்கம்மாள்புரம், வள்ளிநாயகபுரம், மந்திகுளம், இலந்தைகுளம், லட்சுமி நாராயணபுரம், விரிசம்பட்டி, நெடுங்குளம், கன்னிமார்குட்டம், தத்தனேரி, துவரந்தை, குறளயம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.
மானாவாரி பயிர் சாகுபடியை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் இப்பகுதி விவசாய நிலங்களில் தற்போது தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலை நிறுவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். காற்றா லைகள் அமைப் பதற்காக நில உரிமை யாளர்களான விவசாயி களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் அத்துமீறி இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் விளாத்திகுளம் தாலுகா பகுதி விவசாயிகள் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத அளவிற்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு கால்நடை களுக்கான மேய்ச்சல் தொழிலும் முடங்கியுள்ளது.
விவசாய நிலங்களை பாழ்படுத்துவது குறித்து தட்டிக்கேட்கும் விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசில் பொய் புகார் கொடுத்து வருகின்றனர். அத்துமீறி விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு ஆதரவாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறையினர் இருந்து வருவது கண்டனத்திற்குரியதாகும்.
பாதிக்கப்பட்டுவரும் அப்பாவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.
இதில், இளைஞரணி நிர்வாகிகள் காமராஜ், கதிரவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.