ராசிபுரத்தில் தொழிலாளி குத்திக் கொலை
ராசிபுரம்:
ராசிபுரத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் கழுத்தில் குத்திக் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் வெங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (19). நேற்று இரவு ஈஸ்வரன் அந்தப் பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
வெளியே சென்றிருந்த அவரது மனைவி சுகன்யா வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவன் ஈஸ்வரன் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.
இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தந்தனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் கொலை செய்யப்பட்ட ஈஸ்வரனின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டார். மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து அருகில் உள்ள சர்ச் வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொலை செய்யப்பட்ட ஈஸ்வரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நகரின் முக்கிய பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.