உள்ளூர் செய்திகள்
கைது

13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் அத்துமீறல்- இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் கைது

Published On 2022-05-11 07:20 GMT   |   Update On 2022-05-11 07:20 GMT
தேனாம்பேட்டையில் இருந்து பம்மலுக்கு 13 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று வீட்டில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வந்த 13 வயது சிறுமி கடந்த 6ந்தேதி திடீரென மாயமானார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காணாமல் போன சிறுமி பம்மல் பகுதியில் ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். பின்னர் வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு மயிலாப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சிறுமியுடன் பம்மலில் உள்ள வீட்டில் தங்கியிருந்த உமாபதி என்ற 23 வயது வாலிபரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமியுடன், உமாபதிக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது. இன்ஸ்ட்ராகிராமில் ஏற்பட்ட இந்த பழக்கத்தை தவறாக பயன்படுத்திய உமாபதி, சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 6ந்தேதி முதல் பம்மல் வீட்டில் வைத்து வாலிபர் உமாபதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதையடுத்து தேனாம்பேட்டை மகளிர் போலீசுக்கு விசாரணை மாற்றப்பட்டது.

மகளிர் போலீசார் உமாபதி மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உமாபதி தி.நகர் பகுதியில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6ந்தேதி பம்மலில் இருந்து தேனாம்பேட்டை பகுதிக்கு வந்த அவர் சிறுமியை நேரில் வரவழைத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Tags:    

Similar News