உள்ளூர் செய்திகள்
ஆலங்குளத்தில் மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 பேர் கைது
ஆலங்குளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் காவல் நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி சுமார் 1300 மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.
மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்ற போது 4 பேர் இரு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த முருகன்(வயது 44), கருவேலம் (40) லோக பாக்கிய செல்வம் (30),மதன் (29) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கும்பல் அப்பகுதியில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வீட்டின் கதவினை உடைத்து வீட்டின் உள்ளே பார்க்கும் பொழுது அங்கு 20 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் இரண்டையும் பறிமுதல் செய்தனர்.