உள்ளூர் செய்திகள்
அவிநாசி கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் பிடிக்கும் பணி தீவிரம்
அவிநாசிலிங்கேஸ்வரர் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களை பிடித்து மேட்டுப்பாளையம் ஆற்றில் விடும் பணி துவங்கியுள்ளது.
அவிநாசி:
பிரசித்தி பெற்ற அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்துள்ளது. இக்குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த மீன்களை பிடிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி கூறியதாவது:
கோவில் குளத்தில் மீன்கள் அதிகளவில் இருப்பதால் தண்ணீரின் நிறம் மாறி இருப்பதாக கோவிலில் கள ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, மீன்களின் அடர்த்தியை குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த பணியை சிவ பக்தர்கள் செந்தில்குமார், கிருஷ்ணசாமி நாயுடு ஆகியோர் ‘டெண்டர்’ எடுத்து மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.