உள்ளூர் செய்திகள்
கோஷ்டி மோதலில் 6 பேருக்கு கத்திக்குத்து
மதுரையில் நடந்த கோஷ்டி மோதலில் 6 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
மதுரை
மதுரை காஜிமார் தெருவில் பெரியமசூதி உள்ளது. அதனை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்தநிலையில் சையது காஜா இப்ராஹிம்(வயது60) என்பவர் தனது மகன் களுடன் பள்ளிவாசலுக்கு வந்தார்.
அவருக்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது கோஷ்டிமோதலாக மாறியது. ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். உருட்டுக்கட்டை அடியும் விழுந்தது. இதில் சையது காஜா இப்ராஹிம் மகன்கள் சையது முகமது இப்ராஹிம்(20), சையது முகமது அலாவுதீன்(28), சையது நாசர்(24) மற்றும் செய்யது இப்ராகிம் உள்ளிட்ட சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து சையது காஜா இப்ராஹிம் திடீர் நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிவாசல் சந்து முகமது சாசுலி என்ற அஸ்வக் உசைன்(63), மாடக்குளம் அருட்பெருஞ்சோதி நகர் முகம்மது பக்ருதீன் என்ற முனீர்(33) ஆகியோரை கைது செய்தனர்.
இதே வழக்கில் காஜிமார்சந்து அஸ்கந்தர் சரீப்(48) கொடுத்த புகாரின் அடிப்படையில் அக்பர் மற்றும் அவரது மகன்கள் அளவுதீன் என்ற இமதாத், உமர் என்ற அராபத் மற்றும் மூன்ஜி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த அஸ்கந்தர்செரிப் என்ற இர்பான்(48), சாகுல்ளஹமீது(30), முகமது அஸம்(32) ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.