உள்ளூர் செய்திகள்
பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த மூதாட்டி
பாளையில் பூட்டிய வீட்டில் மூதாட்டி பிணமாக கிடந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை சாந்திநகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி விக்டோரியா (வயது 74). மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
இவர்களது மகன், மகள்கள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்கள். இதனால் விக்டோரியா மட்டும் பாளையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இருக்கையில் அமர்ந்தவாறு விக்டோரியா இறந்து கிடந்தார்.
அவர் இறந்து 2 நாட்கள் இருக்கும் என்பதால் அங்கிருந்து துர்நாற்றம் வீசியது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்டோரியா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.