2 வருடங்களுக்கு பிறகு பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி உள்ளது. மேலும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே பேரிஜம் ஏரி அமைந்துள்ளதால் அங்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பேரிஜம் ஏரிக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுவதாக கூறி வனத்துறை கடந்த 2020 ஆம் ஆண்டு சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறை தொடர்ந்து தடை விதித்தது. இதனையடுத்து பேரிஜம் ஏரியை திறக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து கடந்த 4ம் தேதி பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேரிஜம் ஏரியின் கதவினை திறந்து வைத்து விரைவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்து சென்றார். அதன்பின்னர் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதியளித்தது.
வனத்துறையின் தடை நீக்கத்தைத் தொடர்ந்து பேரிஜம் வனப்பகுதியில் மிதமான வெப்பம், குளிர்ந்த காற்று, அமைதியான சூழ்நிலை, பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேலென மலை முகடுகள் காட்சியளிப்பதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் அமைதிப்பள்ளத்தாக்கு, தொப்பி தூக்கிப்பாறை, மதி கெட்டான் சோலை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் இரண்டு வருடங்களுக்கு பிறகு பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மோயர் சதுக்கம் பகுதியில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் புரிவோர் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.