உள்ளூர் செய்திகள்
நெல்லையில் முககவசம் அணியாமல் வந்த ரெயில் பயணிகளிடம் ரூ.500 அபராதம்- ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் வசூல்
நெல்லை ரெயில் நிலையத்தில் இன்று முககவசம் அணியாமல் வந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:
கொரோனா பரவலை தடுக்க வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ரெயில்கள் மூலம் நெல்லை வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்காக மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பில் ரெயில் நிலைய வளாகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து பயணிகளும் உடல் வெப்ப பரிசோதனை சரி பார்க்கப்பட்டு அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
நெல்லை ரெயில் நிலையத்திற்கு முககவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இன்று சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் தலா ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு அதிகாரிக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து ரெயில் நிலைய வளாகம் மற்றும் தண்டவாளங்கள், ரெயில் பெட்டிகளில் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து பஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தீவிர கண்காணிப்பு நடை பெற்று வருகிறது.
தொடர்ந்து பொதுமக்கள் கட்டாய முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், காவல் துறை சார்பிலும் அறிவுத்தப்பட்டு வருகிறது.