உள்ளூர் செய்திகள்
கத்தி சேவல் சண்டை - இளைஞர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
சேவலை தயார்படுத்தி அவற்றின் கால்களில் கூர்மையான கத்தி கட்டிவிட்டு சண்டையிட செய்கின்றனர்.
அவிநாசி;
அவிநாசி கிராமப்புறங்களில் இளைஞர்கள் பலர் பொழுதுபோக்காக தடை செய்யப்பட்ட சேவல் சண்டையில் ஈடுபடுவது தொடர்கிறது. அவிநாசி போலீசார் குப்பாண்டம்பாளையம், முள்ளுக்காடு பகுதியில் நடத்திய சோதனையில் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 இளைஞர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.3,300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சண்டைக்கு பயன்படுத்திய சேவலில் 2 சேவல் இறந்த நிலையிலும், 2 சேவல் உயிருடனும் பறிமுதல் செய்யப்பட்டது. இறந்த சேவல்கள் கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:
சேவல் சண்டை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், கல்லூரி முடித்த 20 முதல் 23 வயது வரையுள்ள இளைஞர்கள் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர்.
இதற்காக சேவலை தயார்படுத்தி அவற்றின் கால்களில் கூர்மையான கத்தி கட்டிவிட்டு சண்டையிட செய்கின்றனர். இதுபோன்ற செயலில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என்றனர்.