உள்ளூர் செய்திகள்
அமராவதி அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
பொதுப்பணித்துறையினர் கண்காணித்து அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள அமராவதி அணை பாசன ஆதாரமாகவும், சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. அணை பூங்கா, முதலைப் பண்ணையை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அணையில் அத்துமீறி சுற்றுலாப் பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது. நீர் தேக்கத்தில் குளிப்பதற்கு, பொதுப்பணித்துறையினர் தடைவிதித்து அதற்கான எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர். அணையில் முதலைகள் நடமாட்டமும் உள்ளது.
இந்த விபரீதம் தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி குளிக்கின்றனர். படகு சவாரிக்காக அமைக்கப்பட்ட படித்துறையை ஒட்டி ஆழமான பகுதியில் குளித்து வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறையினர் கண்காணித்து அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
இதே போல் அணை அருகிலுள்ள பாலத்திலும் ஆற்றுக்குள் இறங்கியும், பாதுகாப்பில்லாமல், ‘செல்பி’ எடுக்கின்றனர். எனவே அணைப்பகுதியில் கண்காணிப்புக்கு தனியாக பணியாளர்கள் நியமிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.