search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி அணை"

    • கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது.
    • பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணையை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாசனம் மற்றும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி ஆறு மூலமாக 29 ஆயிரத்து 387 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பிரதான கால்வாய் மூலமாக 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, பாம்பாறு, தேனாறு உள்ளிட்ட ஆறுகள் ஓடைகள் மூலம் நீர்வரத்து ஏற்படுகிறது.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது. இதனால் கடந்த மாதம் 25-ந்தேதி ஆறு மற்றும் கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் கோடை காலத்திற்கு முன்னதாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து விட்டதால் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நீர் முற்றிலும் நின்று போனது. இதன் காரணமாக ஓடைகள், ஆறுகளில் படிப்படியாக நீர்வரத்து சரிந்து வருகிறது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் குறைந்து விட்டது.

    அத்துடன் பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் -பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 69.49 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 14 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 490 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும்.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முடியும் தருவாயில், டிசம்பர் மாதம் இறுதியில் எதிர்பாராத விதமாக கனமழை கொட்டியது . வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அணையில் கடந்த 30-ந் தேதி நீர்மட்டம் 86 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 82.52 அடியாக குறைந்துள்ளது.

    • கடந்த 2 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • வனப்பகுதியில் பெய்த மழையால் மத்தள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 20-ந்தேதி அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. 90 அடி உயரம் கொண்ட அணையின் மொத்த நீர் தேக்க பரப்பளவில் நீர் இருப்பு கடந்த 20 நாட்களாக 89 அடிக்கும் மேலாக நீடித்து வந்ததால் அணைக்கு வருகின்ற நீர்வரத்து ஷட்டர்கள் வழியாக தொடர்ந்து உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகலாக அணையில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதைத்தொடர்ந்து அணையில் உள்ள ஷட்டர்கள், பிரதான கால்வாய் மற்றும் 9 கண் மதகுகளில் 6 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

    இதனால் திருப்பூர், கரூர் மாவட்ட அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.92 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 711 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 963 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணைப்பகுதியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 11.8 செ.மீ., மழையும், திருமூர்த்தி அணைப்பகுதியில் 10.3 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

    உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குலிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீர் ஆதாரமாக உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பஞ்சலிங்க அருவியின் நீர் ஆதாரங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி கொட்டி வருகிறது. அந்த தண்ணீர் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை சென்றடைகிறது.

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் மத்தள ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறானது நல்லாறு, பாலாறு உள்ளிட்ட துணை ஆறுகள், ஓடைகளுடன் இணைந்து இறுதியில் கேரள மாநிலத்தை சென்று அடைகிறது. இந்த நெடுந்தூர பயணத்தில் ஏராளமான கிராமங்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் பணியை செய்து வருகிறது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் பெய்த மழையால் மத்தள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடிவாரத்தை அடைந்த காட்டாற்று வெள்ளமானது ஆற்றின் 2 கரைகளையும் தழுவியவாறு சென்றது. அப்போது ரெட்டிபாளையம்-பொன்னாலம்மன் சோலை சாலையை அடித்து சென்றது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    மேலும் அமராவதி அணையின் பிரதான நீராதாரத்தில் ஒன்றான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளமானது கட்டளை மாரியம்மன் கோவில் அருகே மலைவாழ் மக்கள் அமைத்திருந்த கடைகளை சூழ்ந்தவாறு செல்கிறது. இதனால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    • நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அணையின் பிரதான நீர்வரத்தான பாம்பாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
    • அணையின் முழு கொள்ளளவான 90 அடியை நெருங்கியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. இதனை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அணையின் பிரதான நீர்வரத்தான பாம்பாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து 10 ஆயிரம் கன அடியை கடந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்து தற்போது 86 அடியை எட்டியுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 90 அடியை நெருங்கியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவியதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முதல் மலைப்பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.

    இருப்பினும் அணை அதன் முழுகொள்ளளவை நெருங்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. அதேபோல் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது பெய்த மழையில் அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால் உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    • அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    உடுமலை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது.

    இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 83.25 அடி தண்ணீர் நிறைந்துள்ளது. அணைக்கு 10194 கன அடி நீர்வரத்து உள்ளது. முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமராவதி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தண்ணீர் திறக்கப்படும்பட்சத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விவரம் வருமாறு:-

    மடத்துக்குளம்-45, தாராபுரம்-17, மூலனூர்-5, குண்டடம்-10, உப்பாறு அணை-16, நல்லதங்காள் ஓடை அணை-8, உடுமலை-35, அமராவதி அணை-75, திருமூர்த்தி அணை-56, திருமூர்த்தி அணை ஐ.பி.,-55. மாவட்டம் முழுவதும் மொத்தம் 338.30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு, இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.
    • அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையானது நிரம்பும் தருவாயில் உள்ளது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு, இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாமல் போனது. இதனால் அணையின் நீா் இருப்பைப் பொருத்து குடிநீா்த் தேவைகளுக்காகவும், பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நிலைப்பயிா்களை காப்பாற்றவும் ஜூன் 29, ஆகஸ்ட் 8, அக்டோபா் 13-ந் தேதி என 3 முறை அணையில் இருந்து உயிா் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீா் இருப்பு குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த 10-ந் தேதி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது. அதன் பின்னா் கடந்த 10 நாள்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையானது நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதனால் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிட அரசுக்கு பொதுப் பணித் துறையினா் கருத்துரு அனுப்பியுள்ளனா். மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறியதாவது:- ஆண்டுதோறும் நவம்பா் மாதம் வடகிழக்குப் பருவமழையை பொருத்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். தற்போது அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. மேலும் வடகிழக்குப் பருவமழையை நம்பிக்கையோடு எதிா்பாா்த்துள்ளோம். ஆகையால் இன்னும் சில நாட்களிலேயே அணையைத் திறந்துவிட வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து விளக்கமாக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளோம் என்றனா்.  

    • அமராவதி அணை வாயிலாக 54,637 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
    • நீர் திறக்க வேண்டும், என பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 29,387 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களும், 25,250 ஏக்கர் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் என 54,637 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஜூன் 1 முதல் மார்ச் 31 வரையும், புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு, ஆகஸ்டு1 முதல், மார்ச் 31 வரை வழங்க வேண்டும். நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணைக்கு நீர் வரத்து பாதித்தது. இதனால், பாசனத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையிலும், குடிநீர் தேவைக்காகவும், இரு முறை உயிர்த்தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கி, அணைக்கு நீர் வரத்து துவங்கியுள்ள நிலையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்க வேண்டும், என பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 18 வாய்க்கால் பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, வரும், 24-ந் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரை நீர் திறக்க, நீர் வளத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்து, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர்.

    அதிகாரிகள் கூறுகையில், அமராவதி அணையின், மொத்தமுள்ள 90 அடி உயரத்தில் 78.22 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,030.18 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 679 மில்லியன் கனஅடி நீர் வரத்து உள்ளது.

    அணை நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் வரத்து அடிப்படையில் 3,174.34 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொருத்து, பாசன நிலங்களுக்கு, பாசன காலம் நீடிப்பு செய்யப்படும் என்றனர்.

    • வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வழியாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜ வாய்க்கால்களுக்கு உட்பட்ட 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஜூன் மாதம் நீர் திறக்கப்பட்டு அக்டோபர் வரை நீர் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, தென் மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து பெருமளவு பாதித்தது. இதனால் வழக்கமாக ஆகஸ்டு- செப்டம்பர் மாதங்களில் மீதம் உள்ள நிலங்களுக்கு பாசனம், பழைய ராஜவாய்க்கால் பாசனத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு நீர் திறப்பது கேள்விக்குறியானது. இதனால் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு இரு முறை உயிர்த்தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.

    புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் பயன்பெறும் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கும் உயிர்த்தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த 15 நாட்களாக அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அமராவதி அணையில் மொத்தம் உள்ள 90 அடியில், 74.12 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில் 2,705.89 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், நீர்வரத்து வினாடிக்கு 709 கன அடியாக உள்ளது. அமராவதி பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கும், பழைய ஆயக்கட்டு வலது கரை கால்வாய்கள் பாசனம் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில், நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர் சாகுபடிக்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நீர் இருப்பு எதிர்பார்க்கும் நீர்வரத்து அடிப்படையில் வாட்டர் பட்ஜெட் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அணையில் தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கும் நீர்வரத்தை பொருத்தும், பாசன பகுதிகளிலும் பருவ மழை பெய்யும் போது நீர் தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவ மழை காலத்தில் அணை நிரம்பி நீர் வீணாகாமல் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கும், வலது கரை பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் வழங்குவதற்கான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒரு வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • மேற்குத்தொடச்சி மலைப்பகுதியில் செப்டம்பரில் ஓரளவு மழைப்பொழிவு இருந்ததால் அணைக்கு 400 முதல் 500 கன அடி வரை நீா்வரத்து இருந்தது.
    • தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாமல் குறைந்து போனது. இதனால் அணையில் உள்ள நீா் இருப்பை பொறுத்து கரூா் வரையில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் தேவைகளுக்காகவும், பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிா்களைக் காப்பாற்றவும் ஜூன் 29-ந் தேதி அணையில் இருந்து உயிா் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

    இதையடுத்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு நிலைப் பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நனைப்பிற்கும், குடிநீா்த் தேவைகளுக்காகவும் மீண்டும் அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆகஸ்ட் 8-ந்தேதி அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீா்மட்டம் 65 அடியாக இருந்தது. இதைத்தொடா்ந்து அணையின் நீா்மட்டம் குறைந்து போனது.

    இந்நிலையில் மேற்குத்தொடச்சி மலைப்பகுதியில் செப்டம்பரில் ஓரளவு மழைப்பொழிவு இருந்ததால் அணைக்கு 400 முதல் 500 கன அடி வரை நீா்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து 60 அடியை தாண்டியது.

    இதைத்தொடா்ந்து பயிா்களை காப்பாற்றும் பொருட்டும், குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் பொருட்டும் அக்டோபா் 13ந்தேதி அமராவதி அணையில் இருந்து மீண்டும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையில் நீா் இருப்பு படிப்படியாக குறைந்தது.

    தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் இன்று காலை நிலவரப்படி 70 அடியை எட்டியது. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத்தலமான திருமூா்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • நடப்பாண்டு பருவமழைகள் ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் குறைந்த நீர் இருப்பு மட்டுமே உள்ளது
    • அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்தும், நீர்மட்டமும் பெருமளவு சரிந்துள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையிலிருந்து ஜூன் 1-ந்தேதி முதல் பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு பருவமழைகள் ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் குறைந்த நீர் இருப்பு மட்டுமே உள்ளது. இதனால் அலங்கியம் முதல் கரூர் வரையிலான வலது கரை பழைய ஆயக்கட்டு பாசனம் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    அணை நீர் இருப்பை பொருத்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில் நிலைப்பயிர்களாக உள்ள தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்றவும், கால்நடைகள் மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர்த்தேவையை கருத்தில் கொண்டு உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 12ந்தேதி முதல் 15 நாட்களுக்கு திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள பழைய ஆயக்கட்டு பாசனம், அலங்கியம் முதல் கரூர் வரை 10 கால்வாய்களில் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு ஆற்று மதகு வழியாக 1,503.36 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள 25,250 ஏக்கர் நிலங்களுக்கு 15 நாட்களுக்கு பிரதான கால்வாய் வழியாக 570.24 மில்லின் கனஅடி நீர் என மொத்தம் 2,073.60 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் அமராவதி அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது. உயிர்த்தண்ணீர் திறக்கும் காலம் நிறைவு பெற்றதால் அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்தும், நீர்மட்டமும் பெருமளவு சரிந்துள்ளது.

    அணை நீர் இருப்பை பொருத்து, மீண்டும் வலது கரை மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், பழைய ஆயக்கட்டு, ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு சம்பா பருவ நெல் சாகுபடிக்கும் நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பொழிவு மற்றும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என்றனர்.

    • அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.
    • பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா மையமாக உடுமலை பகுதி அமைந்துள்ளது. அமராவதி அணை, திருமூர்த்திமலை மற்றும் வனப்பகுதிகள் என ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையமாக உள்ளது.

    ஆனால் அவர்களை ஈர்க்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெயரளவிற்கு மட்டுமே சுற்றுலா மையமாக உள்ளது. இதில் அமராவதி சுற்றுலா மையத்தில் அமராவதி அணை மற்றும் பூங்கா, வனத்துறை முதலை பண்ணை, அமராவதி மலைத்தொடர்கள், படகு சவாரி என சுற்றுலா மையமாக உள்ளது.

    ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் அணையின் கரை பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பசுமையான பூங்கா அமைந்திருந்தது.இங்கு பல செயற்கை நீரூற்றுக்கள், அழகான நடை பாதை, புற்கள், வண்ணமயமான செடிகள், பாரம்பரியமான மரங்கள், அவற்றின் வகைகள், இயல்புகள் குறித்த அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.

    அதே போல் அணையின் எதிர்புறம் 2 ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பூங்கா, அரிய வகை பறவைகள், 18க்கும் மேற்பட்ட வன விலங்குகள் தனித்தனி அறைகளிலும், பாம்பு வகைகள் தனித்தனி அறைகளிலும், மான் ஆகியவற்றுடன் உயிரியல் பூங்காவும் இருந்தன.மேலும் பூங்காவில், புலி, மான், காளை என சிலைகள் மற்றும் செடி, கொடிகளால் ஆன செயற்கை கூடாரம் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான அம்சங்கள் இருந்தன.

    சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்தாலும் அணை பூங்காவை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அணை பூங்கா முட் புதர்கள் முளைத்தும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.உயிரியல் பூங்கா முழுவதும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள், அவற்றின் உபகரணங்கள் உடைந்தும், மின் விளக்குகள் திருடப்பட்டும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது அருந்தும் இடமாகவும் பூங்கா மாறியுள்ளது. அணை பூங்கா முழுவதும் அடர்ந்த வனப்பகுதி போல் மாறியுள்ளதால், பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    அதே போல் அவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் இல்லை.வாகனங்கள் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களும் மாயமாகியுள்ளது.அணை மற்றும் அணைப்பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள், அணை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கண்டு கொள்வதில்லை.அழகாக இருக்க வேண்டிய பூங்கா அலங்கோலமாக மாறியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் அவல நிலை உள்ளது.

    எனவே அமராவதி அணை பூங்காவை முழுமையாக புதுப்பிக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அணை பூங்காவை புதுப்பிக்க, பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் பல முறை திட்ட அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு நிதி கோரி அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அணை பூங்கா அடையாளத்தை இழந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா தலமாக உள்ள நிலையில் இதனை மேம்படுத்த வேண்டும். தமிழகத்திலேயே சிறப்பு வாய்ந்த கள்ளி வகைகள் இருக்கும் வகையில், பாறை பூங்கா அமைக்கப்பட்டது.பல்வேறு வகையான மற்றும் வடிவங்களிலுள்ள கள்ளி செடிகள் இங்கு அமைக்கப்பட்டு பல வண்ண மலர்களுடன் அவற்றின் ரகங்கள், இயல்புகள் குறித்து அறிவிப்பு பலகைகள் என அழகாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தாவரங்கள் குறித்த அறிவு வளர்க்கும் அம்சமாகவும் இருந்தது. தற்போது கள்ளிப்பூங்காவும் பராமரிப்பின்றி, அடையாளத்தை இழந்து அடர்ந்த வனமாக மாறியுள்ளது. 

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
    • உதவி பொறியாளர்கள் அரவிந்தன், தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதிஅணை உள்ளது.அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு,சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன.அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுத்து உதவவில்லை.இதன் காரணமாக பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.அத்துடன் அமராவதி ஆறு,பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமராவதி ஆறு, பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற சிறப்பு நனைப்புக்கும் குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள 10 பழைய வாய்க்கால் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப்பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவைக்காகவும் 1503.36 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.அதேபோன்று பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட புதிய பாசன பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் 570.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்து வைத்தார்.அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்று சட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

    நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இதனால் அமராவதிஆறு மூலம் பாசன பெறுகின்ற பழைய வாய்க்கால்களில் 21 ஆயிரத்து 867 ஏக்கரும் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்ற புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் ஆக மொத்தம் 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (பயிற்சி)கிர்திகா,திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன்,தெற்கு மாவட்ட அவைத்தலைவர், ஜெயராமகிருஷ்ணன் உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி,செந்தில்குமார்,மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி,உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி.குமார்,திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன்,பிஏபி பாசன பாசனசங்க தலைவர் மொடக்குப்பட்டி ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து,சௌந்தர்ராஜன், ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம்,செயற் பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன்,உதவி பொறியாளர்கள் அரவிந்தன், தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×