search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனப்பகுதியில் தொடர் மழை- முழு கொள்ளளவை எட்டும் உடுமலை அமராவதி அணை
    X

    உடுமலை அமராவதி அணை நிரம்பியுள்ளதை படத்தில் காணலாம்.

    வனப்பகுதியில் தொடர் மழை- முழு கொள்ளளவை எட்டும் உடுமலை அமராவதி அணை

    • அணை 85 அடியை எட்டியுள்ளதால் விதிப்படி முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த கட்டமாக அணை 88 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீா் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்ததால் விவசாயிகள் கோரிக்கை வைக்கும்போதெல்லாம் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அணையில் இருந்து போதுமான அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது.

    கடந்த செப்டம்பா் 25-ந்தேதி திருப்பூா் மற்றும் கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கேரள மாநிலம் காந்தலூா், மறையூா், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமராவதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினமும் அணைக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் மளமளவென அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் இன்று காலை அணையின் நீா்மட்டம் 85 அடியைக் கடந்தது. இதனால் எந்நேரமும் அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அணையின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறுகையில்,

    அணை 85 அடியை எட்டியுள்ளதால் விதிப்படி முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அணை 88 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீா் திறந்து விடப்படும் என்றனா். 90 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை நிலவரப்படி 85.50 கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு உள் வரத்தாக 1550 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. 150 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×