என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் மழை"

    • தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
    • திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை பெரும்பாலான இடங்களில் இடைவிடாது சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. குளு, குளுவென வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திருமூர்த்தி மலைக்கு வந்த பக்தர்கள், அமணலிங்கேசுவரர் கோவில் அருகே குளித்து விட்டு, மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். தொடர் மழையால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 988 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 883 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    90 அடி உயரம் கொண்ட அந்த அணையில், இன்று காலை நிலவரப்படி 73 அடியாக தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 60 அடி உயரம் கொண்ட அந்த அணையில் 46.21 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையானது காலை 8 மணிக்கு மேலும் நீடித்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் மணீஷ் நாரணவரே உத்தரவிட்டார்.

    8 மணிக்கு மேல் விடுமுறை விடப்பட்டதால் அதற்கு முன்னதாக பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டனர். விடுமுறை விடப்பட்டதால் மீண்டும் பள்ளிக்கு சென்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனால் பெற்றோர்கள்-மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், பொதுமக்கள் நள்ளிரவு வரை பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். இதன் காரணமாக அனைத்து வீதிகளிலும் பட்டாசு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.

    தொடர்மழை காரணமாக துப்புரவு பணியாளர்களால் முழுமையாக குப்பையை அகற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் முடிந்த அளவுக்கு மழையில் நனைந்தபடி குப்பை அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். 

    • சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.
    • உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், காட்டூர், காட்டூர் புதூர், உகாயனூர், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கக்கூடிய விவசாய விளை பொருட்களான தக்காளி, கத்திரிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய், காலி பிளவர் உள்ளிட்டவற்றை விவசாயிகள் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் திருப்பூரில் விடிய விடிய பெய்த கனமழையால் தென்னம்பாளையம் தெற்கு உழவர்சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை விற்க முடியாமல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் அதனை எடுத்துச்செல்ல முடியாமல் பூசணிக்காய் ,தக்காளி, கீரைகளை சாலையில் வீசிச்சென்றனர். சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.

    தெற்கு உழவர் சந்தையில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் வழங்கியும் சரியான நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு தேங்கக்கூடிய மழை நீரை வெளியேற்றக்கூடிய வடிகால் வசதியை ஏற்படுத்தாததால் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் மாறி விடுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் தேங்கி கிடந்த மழைநீரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாயிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை கப்பல் விடும் போராட்டத்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர். 

    • மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
    • கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பலத்த மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது.

    பின்னர் இரவு 10 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழை இன்று அதிகாலை 4 மணி வரை இடைவிடாமல் பெய்தது. மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் இந்த மழை நீடித்தது. குறிப்பாக திருப்பூர் மாநகர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக திருப்பூர் கலெக்டர் அலுவலக முகாம் பகுதியில் 15 செ.மீ., வரை மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மாநகராட்சி பணியாளர்கள் தேங்கி உள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    திருப்பூர் அறிவொளி நகர் பகுதி முழுவதுமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பெண்கள் குழந்தைகள் என ஏராளமான மக்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக அந்த பகுதி வெள்ளக்காடாக மாறி உள்ளது. மழை காரணமாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை மின்சாரம் கிடைக்கவில்லை. குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் விஷப்பூச்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பேக்கிங் அட்டைகள் டெலிவரிக்கு தயாராக இருந்த நிலையில் மழை நீர் உள்ளே புகுந்ததால் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான அட்டைகள் தண்ணீரால் சேதமடைந்துள்ளது. அதே நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் அட்டைகளை ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ தண்ணீரில் மூழ்கி என்ஜினில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மழை நீரால் சேதம் அடைந்துள்ளது. இதேபோல் இப்பகுதியில் பல வீடுகளிலும் மழை நீர் புகுந்தது.

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் பின்புற பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருந்த 10 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அருகில் உள்ள மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சாமுண்டிபுரம், அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.



    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-110, திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம்-150, திருப்பூர் தெற்கு-96, கலெக்டர் அலுவலகம்-131, அவினாசி-75, ஊத்து க்குளி-120, பல்லடம்-28, திருமூர்த்தி அணை-25. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7.7 செ.மீ., மழை பெய்துள்ளது.

    திருப்பூர் ஊத்துக்குளியில் இருந்து கதித்தமலை வழியாக காங்கயம் பாளையம் என்.எஸ். செல்லும் வழியில் உள்ள அவரக்கரை பள்ளத்தில் உள்ள பாலத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் ஊத்துக்குளி அடுத்த ஆதியூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் திருவாய் முதலியூர் அருகில் உள்ள பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. 

    • 25-வது வார்டுக்குட்பட்ட எஸ்.பி.நகர் பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் அந்தப் பகுதியில் உள்ள 100 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் நனைந்து சேதமடைந்தன.
    • பல்லடம் பகுதியில் தொடர்ந்து ஒரு மணிநேரம் மழை பெய்ததால் அண்ணா நகர், மகாலட்சுமி புரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாநகரில் பெய்த மழையின் காரணமாக அவினாசி ரோடு, பி.என்.ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக அவினாசி சாலை காந்திநகர் 80 அடி ரோட்டில் முழங்கால் அளவுக்கு மழைநீருடன் கழிவுநீர் பாய்ந்தது. இதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

    25-வது வார்டுக்குட்பட்ட எஸ்.பி.நகர் பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் அந்தப் பகுதியில் உள்ள 100 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் நனைந்து சேதமடைந்தன.

    பல்லடம் பகுதியில் தொடர்ந்து ஒரு மணிநேரம் மழை பெய்ததால் அண்ணா நகர், மகாலட்சுமி புரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×