உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவிலில் தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலை உள்ளது.இந்த நூற்பாலையில் 1500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.
இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 5 வருடங்களாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும் விருப்ப ஓய்வு, பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஆகியவையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்டோர் ஆலையின் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.அப்போது அவர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குள் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நூற்பாலை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொழி லாளர்கள் தங்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி மற்றும் விருப்ப ஓய்வு வழங்ககோரி 50 பெண்கள் உள்ளிட்ட
100-க்கும் மேற்பட்டோர் நூற்பாலையின் நுழைவுவாயிலில் அமர்ந்து கடந்த
30-ந்தேதி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
30-ந்தேதி தொடங்கிய உள்ளிருப்புபோராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது தொழிலாளர்கள் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்களின் கோரிக்கைக்கு முடிவு எட்டப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.